Monday, November 9, 2009

9. செம்படையின் எழுச்சியும் இட்லரின் வீழ்ச்சியும்!

போர் இழுத்துக் கொண்டே சென்றது. இட்லர் சோவியத்தின் மீது படையெடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. செம்படை வீரர்கள் ஒரு கோடிக்கும் மேல் உயிர்த்தியாகம் செய்து தாய் நாட்டைக் காத்தனர். செம்படையின் வீரம் இட்லருக்கு ஆத்திரமூட்டியது. தான் கைபற்றிய மேற்கு ரஷ்யப் பகுதி மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் பாசிஸ்டுகள் வெறியாட்டம் போட்டனர். ஒவ்வொருவராக கொலை செய்யக் கூட இட்லருக்கு பொறுமையில்லை.

எனவே விஷ வாயுக் கொட்டடிகள் என்ற ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்தான். கொல்லப்பட வேண்டியவர்கள் ஒரு பெரிய கொட்டடியில் அடைக்கப்படுவர். காற்றோடு விஷ வாயு கலந்து செலுத்தப்படும். ஒரு நிமிடத்தில் பல்லாயிரம் பேர் மடிந்து போவார்கள். இதே போல பல கோடி மக்களை இட்லர் கொலை செய்தான்.

சோவியத்தைத் தோற்கடிக்க தன் போர்த்தந்திரத்தை மாற்றினான். இட்லர் தெற்கே அமைந்திருந்த ஸ்டாலின்கிராடு என்ற நகரத்தைத் தாக்கினான். அதைக் கைப்பற்றுவதன் மூலம் மேற்காசிய நாடுகளைப் பிடிக்க முடியும். அவற்றின் எண்ணெய் வளத்தை பயன்படுத்தி புதிய பலத்துடன் சோவியத் ரஷ்யாவைத் தாக்கி அழிக்க முடியும் என திட்டமிட்டான். (இந்தியாவை கைபற்றுவது கூட அவனுடைய திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.)

1942 செப்டம்பரில் ஸ்டாலின்கிராடு தாக்கப்பட்டது. தன்னுடைய மிகச்சிறந்த படைகளை இந்த போருக்கு அனுப்பி வைத்தான் இட்லர். தான் அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளின் படைகளையும் திரட்டி ஸ்டாலின்கிராடின் மீது ஏவினான்.

நாலாபுறங்களில் இருந்தும் ஸ்டாலின்கிராடு சூழப்பட்டது. கற்பனை செய்துக் கூட பார்க்க முடியாத கோரத்துடன் ஸ்டாலின்கிராடு தாக்கப்பட்டது. ஜெர்மானிய விமானப்படை நகரைத் தரைமட்டமாக்கியது. மண்மேடுகளுக்குப் பின்னால் இருந்து செம்படை தாக்கியது. ஸ்டாலின்கிராடின் உழைக்கும் மக்கள் ஆண்களும் பெண்களும் செம்படையுடன் சேர்ந்து போரிட்டனர். தங்களின் தலைவரின் பெயரில் அமைந்த நகரைக் காக்க ஒப்பில்லாத தீரத்துடன் அவர்கள் சண்டை செய்தனர்.

இந்த உக்கிரமான சண்டை 200 நாட்கள் நீடித்தது. பல லட்சம் செம்படை வீரர்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

பாசிஸ்டுகளுக்குப் பாடம் புகட்டப் புதிய திட்டமொன்றை ஸ்டாலின் வகுத்தார். முற்றுகையிடப்பட்ட செம்படையைக் கொண்டு அதிரடித் தாக்குதல் நடத்தி ஜெர்மானிய படையை சுற்றி வளைத்து கொள்வது என்பது தான் அந்த திட்டம். இதை செய்து முடிக்க வீரர்கள் அசாத்தியமான உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் போரிட வேண்டியிருக்கும். எதிர்த் தாக்குதல் குறித்த அறிக்கை ஒவ்வொரு செம்படை வீரனுடைய உள்ளத்திலும் ஊடுருவியது.

செம்படையின் எதிர்தாக்குதல் தொடங்கியது. எதிரியின் படைகளை ஊடுருவிச் சென்றது செம்படை. எதிரியை சுற்றி வளைத்தது. சிங்கத்தின் குகைக்குள் மாட்டிக் கொண்ட நரியைப் போல ஜெர்மானியப் படை அல்லல்பட்டது. ஸ்டாலின்கிராடின் மீது படையெடுத்து வந்த 35 லட்சம் பேர் கொண்ட படை தோற்று ஓடியது. ஜனவரி 31, 1943-இல் ஜெர்மானிய தளபதியான பௌலுஸ் என்பவன் 4 லட்சம் பாசிஸ்டுகளுடன் சரணடைந்தான்.

மற்ற நாடாக இருந்தால் சரணடைந்த பாசிஸ்டுகளை ஒரே நொடியில் கொன்றிருக்கும். அவர்கள் மக்களுக்கு செய்த கொடுமைகள் அப்படிப்பட்டவை. ஆனால், சோவியத் ரஷ்யா அப்படி செய்யவில்லை. அவர்களை மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பியது. அங்கு அவர்களுக்கு மனிதர்களாக வாழ்வது எப்படி என்று கற்றுத் தரப்பட்டது. காரணம், இது கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உரிய உயர்ந்த பண்பு.

ஸ்டாலின்கிராடு சண்டை வரை, பாசிஸ்டுகள் மற்றவர்களை அடிக்கத்தான் பழகியிருந்தனர். ஸ்டாலின்கிராடில் முதன்முறையாக அவர்கள் அடிவாங்கினர். இட்லரின் அழிவு காலம் ஸ்டாலின்கிராடு சண்டையில் இருந்து தொடங்கியது. இந்த வெற்றிக் கிட்டிய பிறகும் செம்படைகளுக்கு ஓய்வெடுக்க நேரமில்லை. இது ஆரம்பக்கட்ட வெற்றிதான். இன்னும் ஒரு கோடி ஜெர்மானியப் படைகளை சோவியத் ரஷ்யாவை விட்டு விரட்ட வேண்டியப் பணியும் இருந்தது.

ஸ்டாலின்கிராடு சண்டையில் ஏராளமான முன்னணி தளபதிகளை இட்லர் இழந்தான். அவர்களில் பலர் செம்படையல் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களது இழப்பு இட்லருக்குப் பேரிடியாக இருந்தது. அதில் ஓரிருவரையாவது மீட்டுவிட முயன்றான். சண்டையிட்டு அவர்களி மீட்க முடியாது. ஆகவே குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தான் இட்லர்.

ஸ்டாலினுடைய மூத்த மகன் யாக்கவ். சாதாரண சிப்பாயாக செம்படையில் பணியாற்றி வருபவன். ஸ்டாலினும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி யாக்கவுக்கு எந்த சலுகையும் வழங்கியதில்லை. சாதாரண சோவியத் குடிமகனாகவே யாக்கவ் வாழ்ந்தான்.

எல்லைப்புறத்தைக் காவல் காத்த யாக்கவ் போரின் முதல் நாளில் இருந்தே சண்டையில் ஈடுபட்டான். அவனுடைய படைப்பிரிவு சுற்றி வளைக்கப்பட்டது. இறந்தவர்கள் போக மற்றவர்கள் சிறைபிடிக்கபட்டனர். யாக்கவும் அவர்களில் ஒருவன்.

யாக்கவ் ஸ்டாலினுடைய மகன் என்பதைத் தெரிந்து கொண்ட இட்லரின் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. சோவியத் ரஷ்யா பிடித்து வைத்திருக்கும் ஒரு முக்கியமான ஜெர்மானிய தளபதியை விடுதலை செய்தால், தான் யாக்கவை விடுவிப்பதாக பேரம் பேசினான். இதை ஏற்காவிட்டால் யாக்கவைக் கொன்று விடுவதாக மிரட்டினான்.

தன் மகன் மீது பாசம் கொண்ட ஸ்டாலின் அவனுடைய நிலையை எண்ணி வருந்தினார். ஆனால் தன் மகனுடைய மகனுடைய உயிரை காப்பாற்ற வேண்டி இட்லரின் தளபதியை விடுவிக்க முடியாது என உறுதியாக அறிவித்தார். அந்த ஜெர்மானிய தளபதி விடுவிக்கப்பட்டால், அவன் வகுக்கும் திட்டங்களின் மூலம் பல லட்சம் செம்படை வீரர்கள் கொல்லப்படுவர். ஆகவே அவனை விடுதலைச் செய்வதற்கு பதிலாகத் தன் மகன் எதிரிகளால் கொல்லப்பட்டு தியாகியாவதே மேல் என்ற முடிவு செய்தார்.

எந்த நேரத்திலும் மக்களை நேசித்தவர் தோழர் ஸ்டாலின். அவர்களுக்கா தன் உழைப்பையும் வாழ்வையும் மட்டுமல்ல தன் அருமை மகனையே தியாகம் செய்தவர் தோழர் ஸ்டாலின். அதனால்தான் அவர் சோவியத் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார்.

ஸ்டாலின்கிராடில் இருந்து செம்படையின் வெற்றிப்பயணம் தொடங்கியது. எதிரியின் படை, படிப்படியாக பின்னுக்குத் தள்ளப்பட்டது. இட்லரின் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டது. 1944-ஆம் ஆண்டு இறுதியில் சோவியத் ரஷ்யாவிலிருந்து பாசிசப் படை விரட்டியடிக்கப்பட்டது.

சோவியத் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உலகம் இதுவரை கண்டிராத வக்கிரமாக போருக்குப் பின்னால் கிடைத்த வெற்றி இது. உலகத்தின் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்திய இட்லரின் படை ஸ்டாலினுடைய செம்படை முன்னால் மண்டியிட்டது.

இருப்பினும் செம்படைக்கு இன்னும் ஓய்வு கிட்டவில்லை. இட்லரின் காலடியில் அடிமைப்பட்டுக் கிடந்த ஐரோப்பாவையும் செம்படை நிச்சயம் மீட்கும் என்று உழைக்கும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்தையே விடுவிக்கும் வரலாற்றுக் கடமையை செம்படைக்கு சுமத்தியுள்ளனர் ஏகாதிபத்தியவாதிகள்.

1945 ஜனவரியில் இருந்து அதை நிறைவேற்றும் பணியில் செம்படை இறங்கியது. இதுவரை தன் நாட்டு மக்களுக்கானப் போராடிய செம்படை பிறநாட்டு மக்களுக்காகவும் இரத்தம் சிந்தியது. இந்தப் போரில் அந்தந்த நாடுகளின் உழைக்கும் மக்களும் செம்படையுடன் இணைந்துப் போரிட்டனர்.

பாசிஸ்டுகள் தோற்று ஓடினர். ஒவ்வொரு நாடாக விடுவிக்கப்பட்டது. பல்கேரியா, போலந்து, ஹங்கேரி, கிரேக்கம், அல்பேனியா, ருமேனியா, செர்பியா, யூகோஸ்லாவியா, செக்கஸ்லோவாகியா, ஆஸ்திரியா என்று பட்டியல் நீண்டபடி இருந்தது. பாசிஸ்டுகளின் கொடுமைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் செம்படையின் வீரத்தையும் ஸ்டாலின் தலைமையையும் நெஞ்சாரப் பாராட்டினார்கள்.

ஐரோப்பாவை விடுவித்த செம்படை ஜெர்மனியின் எல்லையை நெருங்கியது. சோவியத் ரஷ்யா வெற்றி பெறுவது உறுதியானவுடன் அதுவரை பயந்துக் கிடந்த பிரிட்டனும், அமெரிக்காவும் போரில் குதித்தன. அவர்களின் படைகள் பிரான்சில் இறங்கின.

இட்லருக்குத் தன்னுடைய தோல்வி துல்லியமாகத் தெரிந்தது. இருந்தாலும் சோசலிச சோவியத் ரஷ்யாவிடம் தோற்பதை அவனால் ஏற்க முடியவில்லை. அதனால் அமெரிக்க பிரிட்டன் படைகளிடம் தன் நாட்டை ஒப்படைக்கத் திட்டமிட்டான். ஆகவே தன்னுடைய படைகள் அனைத்தையும் செம்படைக்கு எதிராக குவித்தான். பிரிட்டன் - அமெரிக்க படைகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் (பயத்துடன்) ஜெர்மனியை நோக்கி முன்னேறின.

இதைப் புரிந்து கொண்ட தோழர் ஸ்டாலின் "இந்த மே தினத்திற்குள் பெர்லினை செம்படை பிடிக்கும், ஜெர்மன் பாராளுமன்றத்தின் மேல் செங்கொடிப் பறக்கும்" என பகிரங்கமாக சவால் விடுத்தார்.

இந்த சூளுரையின் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொண்ட செம்படை வீரர்கள் உணவு, உறக்கம் மறந்துப் போரிட்டனர். வர்க்க உணர்வு கொண்ட ஜெர்மனியத் தொழிலாளர்கள் ஒவ்வொரு இடத்திலும் பாசிஸ்டுகளை எதிர்த்துப் போரிட்டனர். பாசிஸ்டுகளின் உறுதிக் குலைந்தது. செம்படை முன்னேறியது.

இட்லரின் கொடுங்கோன்மயில் இருந்து தங்களை மீட்ட செம்படையை வாழ்த்தி வரவேற்றனர் ஜெர்மானிய மக்கள். சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டன. சிறை முகாம்களில் வாடிய மக்களுக்கு விடுதலை கிடைத்தது. 14 ஆண்டுகளில் சிறை முகாம்களில் கசக்கிப் பிழியப்பட்ட ஆல்பிரடு சுதந்திர காற்றை சுவாசித்தார். தங்களை விடுவித்த செம்படைக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். உழைக்கும் மக்கள் ஸ்டாலினுடைய படம் மற்றும் செங்கொடியை ஏந்தி முழக்கமிட்டபடிச் சென்றனர். ஆல்பிரடும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டான். பலம் அனைத்தையும் திரட்டி உரக்க முழக்கமிட்டான்.

"தோழர் ஸ்டாலின் நீடூழி வாழ்க!
செம்படை நீடூழி வாழ்க!"

30 ஏப்ரல் 1945 செம்படை பெர்லினின் வாசலில் சண்டையிட்டது. கடுமையான சண்டை. விடிந்தால் மே தினம். மே தினம் முடியும் வரை மிச்சமிருக்கும் பலமனைத்தையும் திரட்டிப் போரிட இட்லர் உத்திரவிடுகின்றான்.

No comments:

Post a Comment