Monday, November 9, 2009

1. இட்லரின் பாசிசக் கனவு

People Friend Stalin 1931ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி இரவு நேரம். ஜெர்மனியின் தலைநகர் பெர்லின். 20 லட்சம் பாசிஸ்டுகள்* கையில் தீப்பந்தங்களை ஏந்தியபடி ஊர்வலமாகச் செல்கின்றனர். அவர்களின் முகங்களில் இரத்தவெறி. கண்களில் பேராசை. கத்திகள், துப்பாக்கிகள் உயர்த்தி வெறியோடு கூச்சலிடுகின்றனர். பயந்துபோன பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

அந்த அகால வேளையில் தான் இந்தப் பாசிஸ்டுகளுக்குத் தலைவனான இட்லர், ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றான். எதிர் காலத்தில் ஆறு கோடி உலக மக்களைக் கொலை செய்யப் போகும் அந்த மிருகத்தின் சுயரூபம் அன்று பலருக்கு தெரியவில்லை. ஆனால் அவன் தன் குறிக்கோளை வெளிப்படையாகவே அறிவித்தான். ஆரிய-ஜெர்மன் இனம் மட்டுமே வாழத் தகுதி படைத்த இனம்; யூதர்கள்**, கறுப்பர்கள், ஆசியர்கள், இந்தியர்கள் முதலானோர் மனிதர்களே அல்ல; அவர்கள் ஜெர்மானியர்களுக்கு அடிமையாக அடங்கி நடக்க வேண்டும்; ஆரிய ஜெர்மானிய இனம் உலகையே ஆளவேண்டும். இதுவே இட்லரின் பாசிசக் கனவு.

ஆல்பிரடு 20 வயது யூத இளைஞன். தனது வீட்டிற்குள் மறைந்தபடி ஜன்னல் வழியாக அந்த பயங்கரவாதிகளின் ஊர்வலத்தைப் பார்க்கிறான். பயத்தால் அவன் உடல் நடுங்கியது. கண்கள் இருண்டன. இட்லர் ஆட்சியில் உட்கார்ந்து விட்டான். யூத இனத்தை ஒட்டு மொத்தமாக அழிக்கும் வரை அவன் ஓயப்போவதில்லை. இனி யூதர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற சிந்தனையோடு ஆல்பிரடு ஜன்னல் ஓரமாக சரிந்து விழுந்தான்.

ரூடி, இவன் ஒரு இளம் தொழிலாளி; இவன் வேலை செய்த தொழிற்சாலையின் முதலாளி மூன்று மாதமாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கிறான். சம்பளம் கேட்ட தொழிலாளிகளை இட்லரின் அடியாட்களைக் கொண்டு அடித்து நொறுக்கினான். அதைக் கண்டித்துத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். அதைப் பற்றி விவாதிக்கவே ரூடியும் அவனது தோழர்களும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கூடியிருந்தனர்.

பாசிஸ்டுகளின் வெறிக் கூச்சல் ரூடியின் காதிலும் விழுந்தது. இட்லர் ஜெர்மனியின் அதிபரான செய்தி கூடியிருந்தவர்களைக் கதி கலங்க வைத்தது. அந்த அறையில் மயான அமைதி நிலவியது. அடுத்து என்ன? அனைவரின் முகங்களிலும் இதே கேள்வி.

பாசிஸ்டுகள்* - மக்களிடையே இனவெறி / தேசவெறி / மதவெறியைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி உழைக்கும் மக்களை அடிமையாக்கும் ஆதிக்கக் கூட்டம்.

யூதர்கள்** - யூத மதத்தைப் பின்பற்றுபவர்கள், 6 கோடி மக்கள் தொகைக் கொண்ட ஜெர்மனியில் 60 லட்சம் பேர்.

2. பாசிச இட்லரின் காட்டாட்சி!

Stalin இட்லர் ஆட்சியில் அமர்ந்த அடுத்த நொடியில் இருந்தே தன் திட்டங்களை அமலாக்கத் தொடங்கினான். அவனது அடியாள் படை நாடு முழுவதும் கலவரத்தை நடத்தியது. யூதர்கள் லட்சக்கணக்கில் கொத்து கொத்தாக படுகொலைச் செய்யப்பட்டனர். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன. யூதப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் குழந்தைளைக் கூட விட்டு வைக்காமல் கொன்றனர். மிச்சம் மீதி இருந்தவர்கள் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

இட்லரின் அடியாட்படைகள் ஆல்பிரடின் வீட்டையும் கொள்ளையடித்தனர். பிறகு தீ வைத்தனர். ஆல்பிரடின் அண்ணி ஒரு கர்ப்பிணி. வெறி பிடித்த பாசிஸ்டுகள் அவள் வயிற்றைக் கிழித்தனர். (இவர்களுடைய வாரிசுகளும் குஜராத்தில் இதைத்தான் செய்தனர்) கருவை வெட்டித் துண்டாக்கி நெருப்பில் வீசினர். அண்ணியைக் காப்பாற்றப் போராடிய ஆல்பிரடின் மண்டை உடைக்கப்பட்டது. அவனது அண்ணனின் கையும் கால்களும் கட்டப்பட்டு நெருப்பில் வீசப்பட்டான். ஒரு நாய் வண்டிக்குள் வீசப்பட்ட ஆல்பிரடும் சிறை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டான். 30 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். 30 இலட்சம் யூதர்கள் சிறை முகாம்களில் வதைக்கப்பட்டனர்.

யூதர்களை அழிக்கும் போதே கம்யூனிஸ்டுகளையும் ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகள் தொடங்கின. இட்லர் கம்யூனிசத்தை அடியோடு வெறுத்தான். கம்யூனிஸ்டு கட்சியோ உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கப் போராடியது. உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த முதலாளிகள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆயினர். உழைத்த மக்கள் மேலும் லேலும் ஏழைகள் ஆயினர். இட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலாளார்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டது. வேலை நேரம் 12 முதல் 16 மணி நேரமாக அறிவிக்கப்பட்டது. உழைப்பாளிகள் போராடி பெற்ற அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் கலைக்கப்பட்டன. உரிமைக்காக போராடும் மக்களை அடித்து நொறுக்கியது பாசிச இட்லரின் அடியாள் படை. இதற்கெல்லாம் நன்றி கடனாக இட்லரின் ஆட்சிக்கு முதலாளிகள் முழு ஆதரவு அளித்தனர். பாசிச இட்லரின் அடியாள் படைக்குப் பணத்தை வாரியிறைத்தனர். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.

முதலாளிகளோ வேலை நேரத்தை அதிகரித்து தொழிலாளர்களைக் கசக்கி பிழிந்தனர். தொழிலாளர் தலைவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் பிடித்து பாசிஸ்டுகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல் தொழிலாளர்களுக்காக போராடிய தோழர் ரூடியின் தலைக்கும் குறி வைத்தான் அவனுடைய முதலாளி. ஆனால் ரூடியை பிடிக்க முடியவில்லை. கம்யூனிஸ்டு கட்சியின் திட்டப்படி தலைமறைவு ஆனார். சோர்ந்து போய்க் கிடக்கும் மக்களை தட்டி எழுப்பிப் போராடுவதற்கு உணர்வூட்டும் பணியை இரகசியமாக மேற்கொண்டார்.

ஆனால் ரூடியின் குடும்பத்தினர் தப்பிக்க முடியவில்லை. ரூடியின் மனைவியும் குழந்தைகளும் வீட்டோடு வைத்து கொளுத்தப்பட்டனர். இப்படி பல இலட்சம் கம்யூனிசப் போராளிகளும் ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர்.

இட்லரின் இரத்தவெறி இதோடு அடங்கவில்லை தன்னுடைய பாசிசக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத அனைவரையும் கொலை செய்தான். பாசிஸ்ட் கட்சியைத் (நாஜிக் கட்சி) தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. பத்திரிக்கைச் செய்திகள் பாசிஸ்டுகளால் தணிக்கைச் செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட்டன. நீதிபதிகளாக இட்லரின் கைக்கூலிகள் அமர்த்தப்பட்டனர்.

பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. மாணவர்களுக்கு அறிவியல் கருத்துகளுக்குப் பதிலாக பிற்போக்குக் கருத்துகள் போதிக்கப்பட்டன. ஜெர்மனி முழுவதும் திறந்தவெளிச் சிறையாக மாற்றப்பட்டது. உழைக்கும் மக்கள் அனைவரும் அடிமையாக்கப்பட்டனர். பாசிஸ்டுகளோ எக்காளமிட்டனர்.

3. சோவியத் ரசியாவையும் - ஸ்டாலினையும் அழிக்க நினைத்த வல்லூறுகள்

உலகம் முழுவதும் ஜனநாயகத்தையும், மனித நேயத்தையும் நேசிக்கும் மக்கள், இட்லரின் வெற்றியால் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் மகிழ்ச்சி அடைந்தன. ஏகாதிபத்தியவாதிகளால் இட்லர் போற்றி புகழப்பட்டான். இட்லரின் பாசிசப் படைக்கு இலவசமாக ஆயுதங்கள் வழங்கினார்கள். மிக உயர்ந்த இராணுவத் தொழில் நுட்பங்களைக் கற்று கொடுத்தனர். இதைப் பயன்படுத்தி உலகின் மிகப் பெரிய இராணுவத்தை இட்லர் உருவாக்கினான்.

மனித மிருகமான இட்லரை ஏகாதிபத்திய நாடுகள் ஏன் வளர்த்துவிட்டன? உலகின் முதல் சோசலிச நாடான சோவியத் ரஷ்யாவை ஒழித்துக் கட்ட வேண்டும். லெனினுக்குப் பிறகு சோசலிசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்ட தோழர் ஸ்டாலினையும் கொலை செய்ய வேண்டும். இதுவே அந்த நாடுகளின் விருப்பம். இட்லரும் சோவியத் ரஷ்யாவைத் தோற்கடித்து அடிமையாக்கப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்தான்.

சோவியத் ரஷ்யாவை அழிப்பதில் இந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏன் இவ்வளவு வெறி?

ரஷ்ய தொழிலாளர்கள் தோழர் லெனின் தலைமையில் புரட்சி செய்து நவம்பர் 7, 1917இல் அதிகாரத்தை கைபற்றினர். ஆயிரம் பேர் பட்டினியாக சாகவும், அவர்களை சுரண்டும் ஒருவன் சுகபோகமாக வாழவும் காரணமாக இருந்த சுரண்டல் ஒழிக்கப்பட்டது. ஆற்றலுக்கு ஏற்ற உழைப்பு; உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற கோட்பாடு அமலுக்கு வந்தது. சோசலிச (சமத்துவ) சமூகம் அமைக்கப்பட்டது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற நிலைமை ஏற்பட்டது.

சோவியத் ரஷ்யாவை அழிப்பது போலவே தோழர் ஸ்டாலினையும் எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இட்லரும் அவரை தனது சொந்த எதிரியாகக் கருதினான். எல்லா நாட்டு முதலாளிகளின் பத்திரிக்கைகளும் ஸ்டாலினைப் பற்றி அவதூறான செய்திகளையேப் பரப்பின. முதலாளித்துவ சுரண்டல் பேர்வழிகளோ அவர் மீது வெறுப்பைக் கக்கினர். அப்படி என்றால் யார் இந்த ஸ்டாலின்? ஏன் அவரை மட்டும் இவர்கள் இப்படி வெறுக்க வேண்டும்?

பணக்கார நாடுகளிலோ ஒருவன் பணக்காரன் என்றால் ஆயிரமாயிரம் பேர் ஏழைகள். அத்தனைப் பேரையும் சுரண்டித்தான் ஒருவன் கொழுக்கிறான். சோவியத் ரஷ்யாவின் சாதனைகளைப் பற்றி இந்த நாடுகளில் உள்ள ஏழைகள் கேட்டறிந்தனர். அதற்குக் காரணமான கம்யூனிசத்தையும் புரட்சியையும் நேசித்தனர். இது தான் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலாளிகளை பீதியில் தள்ளியது. தங்கள் நாட்டிலும் தொழிலாளர்கள் புரட்சியை நடத்திவிடிவார்களோ என்று அஞ்சினர். ஏழைகளைச் சுரண்டிக் கொழுப்பதற்கு தாங்கள் பெற்றிருக்கும் அதிகாரத்தை தொடர்ந்துப் பாதுகாக்க எதையும் செய்யத் தயாராக இருந்தனர். அதனால் தான் சோவியத் ரஷ்யாவை அழிக்க இட்லருக்கு எல்லாவித உதவிகளையும் செய்தனர்.

அதுமட்டுமல்ல, இந்த பணக்கார நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க ஏழை எளிய நாடுகளைச் (காலனி நாடுகள்) சுரண்டிக் கொள்ளை அடித்தே பணக்கார நாடுகள் (ஏகாதிபத்திய நாடுகள்) செல்வங்களைக் குவித்தன. சோவியத் ரஷ்யாவோ இவர்கள் அடிமைப்படுத்திய ஏழைக் நாடுகளின் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தது. அதற்கான சகல உதவிகளையும் செய்தது. அடிமைத்தனத்தையும் அறுத்தெறியும் கலையைக் கற்று கொடுத்த சோவியத் ரஷ்யாவைக் கண்டு பீதியடைந்த ஏகாதிபத்திய நாடுகள் இட்லரை ஆதரித்தன.

4. யார் இந்த ஸ்டாலின்?

தோழர் ஜோசப் ஸ்டாலினோ ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன். ரஷ்யாவின் ஜார்ஜிய மாகாணத்தில் 'கோரி' என்ற நகரத்தில் 1879 டிசம்பர் 21-ந் தேதி பிறந்தார். தாயார் பணக்கார வீடுகளில் சமையல் வேலை பார்த்தார். கொடிய வறுமையில் ஸ்டாலின் வளர்த்தார். பட்டினியின் நடுவே படித்தாலும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார். மகனை மேல் படிப்புப் படிக்க வைத்திட வேண்டும் என ஸ்டாலினுடைய தாயார் இரவு பகல் பாராமல் உழைத்தார். இறுதியாக பாதிரியார் படிப்பிற்கான கல்லூரியில் தனது மகனை சேர்த்து விட்டார்.

அந்த பாதிரியார் கல்லூரியோ ஒடுக்குமுறைகளின் மொத்த உருவமாக இருந்தது. ரஷ்ய மன்னனான ஜாருக்கு சேவகம் செய்யப், படித்த அடிமைகளை உருவாக்குவதே அக்கல்லூரியின் நோக்கம். மாணவர்கள் சிறைக் கைதிகளைப் போல நடத்தப்பட்டனர். ஸ்டாலின் அக்கல்லூரியை வெறுத்தார். அதே நேரம் அருகில் இருந்த ஒரு நூலகத்திலிருந்து ஏராளமான நூல்களை எடுத்துப் படித்தார். அப்படி அவர் எடுத்துப் படித்த நூல்களில் ஒன்று தான் காரல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்".

அந்த நூல் தான் ஸ்டாலினுடைய வாழ்க்கையில் அவர் போக வேண்டியப் பாதையைக் காட்டியது. ஒரு சிலர் மட்டும் எல்லா செல்வங்களையும் அபகரித்துக் கொள்ள மற்றவர்கள் வறுமையில் வாடும் நிலை ஏன் ஏற்பட்டது என "மூலதனம்" விளக்கியது. ஒரு புரட்சியின் மூலம் தான் உழைக்கும் மக்கள் தங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என அது வழிகாட்டியது.

மார்க்ஸ் காட்டிய கம்யூனிசப் பாதையை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். அதே காலகட்டத்தில் லெனின் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிக் கொண்டிருந்தார். ரஷ்யா முழுவதும் கம்யூனிசக் குழுக்கள் உருவாக்கபட்டன. தன்னுடைய ஊரிலும் ஸ்டாலின் அத்தகைய குழுக்களைத் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கினார். அறியாமை இருளில் தடுமாறிக் கொண்டிருந்த உழைப்பாளிகளுக்குப் புரட்சி பற்றிய அறிவியலைப் போதித்தார்.

ஸ்டாலினுடைய கடின உழைப்பிற்கு நல்ல பலனும் கிடைத்தது. ரஷ்யாவில் ஜார் மன்னனது கொடுங்கோலாட்சிக்கு எதிராக 1901-ஏப்ரலில் ஜார்ஜியத் தொழிலாளர்கள் ஸ்டாலின் தலைமையில் போராட்டத்தில் இறங்கினர். போராட்டம் தோல்வியில் முடிந்தாலும், தொழிலாளர் வர்க்கம் சோர்ந்து விடவில்லை. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஸ்டாலினை வேட்டையாட போலீசும், இராணுவமும் குவிக்கப்பட்டது. ஸ்டாலின் தலைமறைவு ஆனார்.

இப்போராட்டமானது ரஷ்யத் தொழிலாளர்களுக்கு உத்வேகமூட்டியது. இதற்கு தலைமை ஏற்று நடத்தியதன் மூலம் ஸ்டாலின் லெனினது கவனத்தை ஈர்த்தார். தன்னுடைய திட்டங்களை அமலாக்கிட ஒரு அருமையான செயல்வீரர் கிடைத்து விட்டதாக லெனின் மகிழ்ந்தார். அன்று தொடங்கிய லெனின் ஸ்டாலின் தோழமையுறவு இறுதி வரைத் தொடர்ந்தது.

முழு நேரப் புரட்சியாளராக மாறிய ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துகளை ரஷ்யா முழுவதும் பரப்பினார். அவரது உழைப்பின் பயனாக நாடு முழுவதும் கட்சியின் கிளைகள் உருவாக்கப்பட்டன. இதனால், ஸ்டாலினை ஒழித்துக் கட்ட ஜாரின் போலீசு அதிக தீவிரம் காட்டியது. அவர் ஆறு முறை கைது செய்யப்பட்டு சைபீரியப் பனிப் பாலைவனத்திற்கு அனுப்பப்பட்டார். ஒவ்வொரு முறையும் அவர் சிறையில் இருந்து தப்பினார்.

வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்த லெனின் அங்கிருந்து திட்டங்களை வகுத்துக் கொடுத்து கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தினார். ரஷ்யாவில் அவற்றை நிறைவேற்றும் பொறுப்பை ஒரு தலைமை குழுவிடம் ஒப்படைத்தார். ஸ்டாலின் அக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லெனின் திட்டங்களைத் தீட்டினார். ஸ்டாலின் அதனை நிறைவேற்றினார். அவர்களின் உழைப்பின் பயனாக நவம்பர் 7, 1917இல் உழைக்கும் மக்கள் எதிர்நோக்கிய நாள் வந்தது. புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. சுரண்டல் ஒழிக்கப்பட்டது. சோசலிசம் மலர்ந்தது. பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. லெனினது தலைமையில் வறுமையை ஒழித்து முதன்முதலாக பூமியில் ஒரு சொர்க்கத்தைப் படைக்கும் முயற்சியில் சோவியத் ரஷ்ய மக்கள் ஈடுபட்டனர். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் சோசலிச சமூகத்தைத் தானே உழைப்பவர்களின் சொர்க்கம் என்று சொல்வதுப் பொருத்தமாக இருக்க்கும். ஆனால் அந்த முயற்சியின் ஒவ்வொரு அடியிலும் எதிரிகள் குறுக்கிட்டனர்.

5. எதிரிகளின் சதியும், அதை முறியடித்த வரலாறும்!

ஆட்சி இழந்த முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் உள்நாட்டுப் போரை ஏற்படுத்தினர். சோசலிசத்தை ஒழிக்க 21 ஏகாதிபத்திய நாடுகள் படை எடுத்தன. உள்ளுக்குள் இருந்த துரோகிகள் நாச வேலைகளைச் செய்தனர். எங்கும் குழப்பமான சூழ்நிலை நிலவியது. சோவியத் ரஷ்யா அபாயகரமான நாட்களைக் கடந்து கொண்டிருந்தது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு பதிலடிக் கொடுக்க லெனின், "செம்படை" என்னும் மக்கள் படையை உருவாக்கினார்.

செம்படையின் தலைமைத் தளாபதியாக இருந்தவர் டிராட்ஸ்கி. அவர் முதலாளிகளின் கையாள். கம்யூனிஸ்ட் என வேடமிட்டு மற்றவர்களை ஏமாற்றிய நயவஞ்சகர். ஆரம்பத்தில் செம்படை அடைந்த தோல்விகளுக்கு இவரது துரோகமே காரணம். இதனை புரிந்து கொண்ட லெனின், தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஸ்டாலினை முக்கியமான போர்முனைக்குத் தளபதியாக அனுப்பி வைத்தார்.

ஸ்டாலின் தலைமை ஏற்றுக் கொண்ட பின்பு சீர்கேடுகள் களையப்பட்டன. செம்படையில் கட்டுப்பாடும், கம்யூனிச ஒழுக்கமும் நிலை நிறுத்தப்பட்டன. செம்படை வெற்றி நடைப்போடத் தொடங்கியது. 21 கொள்ளைக்கார நாடுகளின் படைகள் தோற்று ஓடின. லெனின் - ஸ்டாலின் தலைமையில் சோவியத் மக்கள் வெற்றிப் பெற்றனர்.

இப்படிப்பட்ட மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் சோவியத் மக்களை பேரிடி தாக்கியது. உலகின் முதல் தொழிலாளர் வர்க்க அரசை அமைத்த தோழர் லெனின் 1924ஆம் ஆண்டு சனவரி 21ஆம் நாள் மரணமடைந்தார். உழைக்கும் மக்கள் துயரக் கடலில் ஆழ்ந்தனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்ட முன்னாள் பணக்காரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழித்துக் கட்ட புதிய வியூகம் வகுத்தனர். அவர்கள் தங்களது அடையாளங்களை மறைத்துக் கொண்டுத் தொழிலாளர்களைப் போல வாழ முனைந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தனர். அதன் தலைமையைக் கைப்பற்றி புரட்சியைக் குழி தோண்டிப் புதைக்க முயற்சி செய்தனர். அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றனர். டிராட்ஸ்கி போன்ற துரோகிகள் அவர்களுக்கு வழிகாட்டினர்.

லெனின் இறந்த பிறகு சோவியத் ரஷ்யாவை வழிகாட்ட சரியான தலைவர் இல்லை என்று இக்கூட்டம் மகிழ்ச்சியில் திளைத்தது. சதித்திட்டங்கள் மூலம் அதனை வீழ்த்திட முடியும் என்றும் நம்பியது.

ஆனால் எதிரிகளின் கனவுகளைத் தகர்த்து தரைமட்டமாக்கினார் ஸ்டாலின். எதிரிகளின் திட்டங்கள் ஒவ்வொன்றையும் மண்ணைக் கவ்வ வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் ஊடுருவி இருந்த எதிரிகள் அம்பலப்படுத்தப்பட்டனர். கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர். மக்களுக்கு எதிராக அவர்கள் புரிந்த குற்றங்களுக்காகத் தண்டிக்கபட்டனர். அரசு அதிகாரத்தில் உழைக்கும் மக்களின் தலைமை தக்க வைக்கப்பட்டது. சோவியத்தின் சோசலிசப் பொருளாதாரத்தைப் புனரமைக்க உலகப் புகழ்மிக்க ஐந்தாண்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார் ஸ்டாலின். மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் என்னென்ன என்பதை உழைக்கும் மக்கள் முடிவு செய்தனர். அவை எவ்வளாவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதையும் அவர்களே திட்டமிட்டனர்.

ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் புதிய தொழிற்சாலைகள் நிர்மானம் செய்யப்பட்டன. தரிசு நிலங்கள் மனிதர்களின் உழைப்பால் விளை நிலங்கள் ஆக்கப்பட்டன. வெள்ளப் பெருக்கையும், அழிவையும் ஏற்படுத்தும் ஆறுகளின் திசைகளை மாற்றினர். உபரி நீர், வாய்க்கால்கள் மூலம் பாலைவனங்களில் பாய்ந்தது. பாலைவனங்கள் சோலைவனங்களாயின. தொழிற்சாலைகளையும், கூட்டுப் பண்ணைகளையும் சுரங்கங்களையும் உழைக்கும் மக்களே நிர்வகித்தனர்.

உற்பத்தியைப் பெருக்க உழைக்கும் மக்கள் புதிய உத்திகளைக் கையாண்டனர். புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. உற்பத்தி பெருகியது. செல்வம் கொழித்தது. அந்த செல்வம் அனைவருக்கும் உழைப்புக்கேற்ப பகிர்ந்தளிக்கப்பட்டது. வறுமை என்பது பழங்கதையானது. பூமியின் சொர்க்கமாக சோவியத் ரஷ்யா மாற்றப்பட்டது.

ஸ்டாலினுடைய தொலைநோக்கு பார்வை, தளராத மன உறுதி, மக்கள் மீதான நேசம், ஒப்பிட முடியாத தலைமை குணம் போன்றவையே இவ்வெற்றிக்குக் காரணமாகும்

உலகம் முழுவதும் இருந்த சுரண்டல் கூட்டம் இதைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டது. ஸ்டாலின் உயிருடன் இருக்கும் வரை தங்களால் உழைக்கும் மக்களை சுதந்திரமாகச் சுரண்ட முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாக தெரிந்தது. அதனால் தான் ஸ்டாலினை ஒழித்துக் கட்ட அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் இட்லருக்கு உதவி செய்தன.

இட்லரைத் தீனி போட்டு ஜல்லிக் கட்டு காளையைப் போல வளர்த்தன. வெறியூட்டப்பட்ட அந்த காளை ஸ்டாலினையும், சோவியத் ரஷ்யாவையும் குத்தி கிழிக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்ன?

6. இட்லரின் கோரமுகம்!


இட்லரின் நோக்கம் சோவியத் ரஷ்யாவை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமல்ல பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா பொன்ற ஏகாதிபத்திய நாடுகளின் காலனிய நாடுகளான ஆசிய, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளையும் அபகரிக்க வேண்டும் என்பதும் அவனுடைய நோக்கமாக இருந்தது.

இத்திட்டத்திற்கு குறுக்கே நின்றது சோவியத் ரஷ்யா மட்டும் தான். அதை வீழ்த்துவது எளிதான காரியமல்ல என அவனுக்குத் தெரியும். அதனால், முதலில் பிற ஐரோப்பிய நாடுகளை அடிமைப்படுத்தி அவற்றின் வளங்களைப் பயன்படித்தி சோவியத்தின் மீது படையெடுக்கத் திட்டம் தீட்டினான்.

ஜெர்மனியைப் போலவே இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தனர். இட்லர் அவர்களோடு இராணுவக் கூட்டணி அமைத்துக் கொண்டான். அதன் பின்னரே தனது கோரமுகத்தை வெளிபடுத்தினான்.

1937இல் ஸ்பெயினில் உழைக்கும் மக்கள் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த மக்கள் குடியரசு இட்லரின் கண்களை உறுத்தியது. அவனுடன் இத்தாலிய பாசிஸ்ட் முசோலினியும் சேர்ந்து கொண்டான். இரு நாட்டு படைகளும் ஸ்பெயினை ஆக்கிரமித்தன. மக்கள் குடியரசு கலைக்கப்பட்டது. பாசிசப் பேயாட்சி தொடங்கியது. ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் காக்கப் போரிட்ட லட்சக்கணக்கானப் போராளிகள் கொல்லப்பட்டனர்.

அடுத்ததாக 1938ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரியா மீது படையெடுத்தான். ஜெர்மன் ராணுவத்தின் மிருக பலத்தின் முன் நிற்க முடியாமல் ஒரே நாளில் ஆஸ்திரியா சரணடைந்தது. அதே வேகத்தில் செக்கோஸ்லோவாகியா மீது படையெடுத்து பாதி நாட்டைப் பிடித்துக் கொண்டான்

இட்லரின் கோரமுகம் வெளிப்பட்டவுடன் உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் அவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சோவியத் ரஷ்யா இதில் முன்னணிப் பாத்திரம் வகித்தது. இட்லரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ராணுவக் கூட்டணி அமைக்க பிரிட்டன், பிரான்சு, அமெரிக்க நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்.

அந்தந்த நாடுகளின் மக்களும் இதையே விரும்பினார். ஆனால் முதலாளிகளோ பாட்டாளிகளின் தலைவரான ஸ்டாலினுடன் கூட்டணி அமைப்பதை நிராகரித்தனர். மாறாக இட்லருடன் புதிய நட்புறவு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டனர்.

ம்யூனிச் ஒப்பந்தம் என்ற இந்த துரோக ஒப்பந்தம் இட்லரின் ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்தியது. பிரிட்டனும் பிரான்சும் தன்னை ஒன்றும் செய்யாது என்பதைப் புரிந்து கொண்ட இட்லர் மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தினான்.

செப்டம்பர் 15, 1939இல் செக்கஸ்லோவாகியாவை முழுமையாக ஆக்கிரமித்தான். 5 நாள் கழித்து லித்வேனியாவை வீழ்த்தினான். அதே வேளையில் இத்தாலியோ அல்பேனியாவையும், லிபியாவையும் வீழ்த்தியது. சீனா மங்கோலியா மற்றும் இதர கிழக்காசிய நாடுகளை ஜப்பான் அடிமைப்படுத்தியது.

இதே ஆண்டு செப்டம்பர் மாதம் இட்லர் போலந்தை ஆக்கிரமித்தான். ஒரே நாளில் டென்மார்க், நார்வே, ஹாலந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளையும் விழுங்கினான். நார்வேக்கு ஆதரவாக பிரிட்டன் தனது கடற்படையை அனுப்பியது. ஆனால் பாசிஸ்டுகளின் படைபலத்தைக் கண்டதும் போரிடாமலே பின்வாங்கியது.

ஜெர்மனிக்கு இணையான ஆயுதபலம் கொண்டது பிரான்சு. அதனால் கூட பாசிஸ்டுகளின் மூர்க்கத்தனத்தின் முன் நிற்க முடியவில்லை. சுமார் இருபது நாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரான்சு ஒரு சில நாட்களிலேயே இட்லரின் காலில் விழுந்தது. யுகோஸ்லோவியா, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா போன்ற நாடுகளின் கதையும் முடிந்து விட்டது. பிரிட்டன் சோவியத் ரஷ்யாவைத் தவிர மற்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இட்லரின் காலடியில்.

அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் செல்வங்கள் கொள்ளையிடப்பட்டு ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டது. தேசபக்தர்கள், கம்யூனிஸ்டுகள், யூதர்கள், கறுப்பர்கள் என லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்பாவி பொதுமக்களை சித்ரவதை செய்துக் கொல்வது பாசிஸ்டு படைகளின் பொழுது போக்கு ஆனது. படுகொலைகள், தீ வைப்பு, பாலியல் வன்முறைகள் என நெருப்பில் வெந்தது ஐரோப்பா.

மற்ற கண்டங்களின் மீது பாய்ந்து கடித்துக் குதற பாசிஸ்டுகள் தயாரிப்பில் இறங்கினர். வரப்போகும் அபாயம் உலக மக்களுக்கு உறைத்தது. பீதியில் இரத்தம் உறைந்தது.

அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என ஒதுங்கிக் கொண்டன. இட்லருடன் ரகசியமாக ஒப்பந்தம் செய்து கொள்ளவும் முயற்சித்தன. உலகையே பாசிச இருள் சூழ்ந்த நேரத்தில் கலங்கரை விளக்கமாக இருந்து ஒளியூட்டியது சோவியத் ரஷ்யா. அந்த நேரத்தில் உலகின் உழைக்கும் மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தது சோவியத் ரஷ்யாவும் ஸ்டாலினும் தான்.

அந்த் நம்பிக்கைக்கும் சோதனை வந்தது. 22 ஜூன் 1941. நள்ளிரவு நேரம் 50 லட்சம் பேர் கொண்ட பாசிஸ்டுகளின் படைகள் கள்ளத்தனமாக ரஷ்யாவிற்குள் நுழைந்தன.