Monday, November 9, 2009

1. இட்லரின் பாசிசக் கனவு

People Friend Stalin 1931ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி இரவு நேரம். ஜெர்மனியின் தலைநகர் பெர்லின். 20 லட்சம் பாசிஸ்டுகள்* கையில் தீப்பந்தங்களை ஏந்தியபடி ஊர்வலமாகச் செல்கின்றனர். அவர்களின் முகங்களில் இரத்தவெறி. கண்களில் பேராசை. கத்திகள், துப்பாக்கிகள் உயர்த்தி வெறியோடு கூச்சலிடுகின்றனர். பயந்துபோன பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

அந்த அகால வேளையில் தான் இந்தப் பாசிஸ்டுகளுக்குத் தலைவனான இட்லர், ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றான். எதிர் காலத்தில் ஆறு கோடி உலக மக்களைக் கொலை செய்யப் போகும் அந்த மிருகத்தின் சுயரூபம் அன்று பலருக்கு தெரியவில்லை. ஆனால் அவன் தன் குறிக்கோளை வெளிப்படையாகவே அறிவித்தான். ஆரிய-ஜெர்மன் இனம் மட்டுமே வாழத் தகுதி படைத்த இனம்; யூதர்கள்**, கறுப்பர்கள், ஆசியர்கள், இந்தியர்கள் முதலானோர் மனிதர்களே அல்ல; அவர்கள் ஜெர்மானியர்களுக்கு அடிமையாக அடங்கி நடக்க வேண்டும்; ஆரிய ஜெர்மானிய இனம் உலகையே ஆளவேண்டும். இதுவே இட்லரின் பாசிசக் கனவு.

ஆல்பிரடு 20 வயது யூத இளைஞன். தனது வீட்டிற்குள் மறைந்தபடி ஜன்னல் வழியாக அந்த பயங்கரவாதிகளின் ஊர்வலத்தைப் பார்க்கிறான். பயத்தால் அவன் உடல் நடுங்கியது. கண்கள் இருண்டன. இட்லர் ஆட்சியில் உட்கார்ந்து விட்டான். யூத இனத்தை ஒட்டு மொத்தமாக அழிக்கும் வரை அவன் ஓயப்போவதில்லை. இனி யூதர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற சிந்தனையோடு ஆல்பிரடு ஜன்னல் ஓரமாக சரிந்து விழுந்தான்.

ரூடி, இவன் ஒரு இளம் தொழிலாளி; இவன் வேலை செய்த தொழிற்சாலையின் முதலாளி மூன்று மாதமாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கிறான். சம்பளம் கேட்ட தொழிலாளிகளை இட்லரின் அடியாட்களைக் கொண்டு அடித்து நொறுக்கினான். அதைக் கண்டித்துத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். அதைப் பற்றி விவாதிக்கவே ரூடியும் அவனது தோழர்களும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கூடியிருந்தனர்.

பாசிஸ்டுகளின் வெறிக் கூச்சல் ரூடியின் காதிலும் விழுந்தது. இட்லர் ஜெர்மனியின் அதிபரான செய்தி கூடியிருந்தவர்களைக் கதி கலங்க வைத்தது. அந்த அறையில் மயான அமைதி நிலவியது. அடுத்து என்ன? அனைவரின் முகங்களிலும் இதே கேள்வி.

பாசிஸ்டுகள்* - மக்களிடையே இனவெறி / தேசவெறி / மதவெறியைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி உழைக்கும் மக்களை அடிமையாக்கும் ஆதிக்கக் கூட்டம்.

யூதர்கள்** - யூத மதத்தைப் பின்பற்றுபவர்கள், 6 கோடி மக்கள் தொகைக் கொண்ட ஜெர்மனியில் 60 லட்சம் பேர்.

2. பாசிச இட்லரின் காட்டாட்சி!

Stalin இட்லர் ஆட்சியில் அமர்ந்த அடுத்த நொடியில் இருந்தே தன் திட்டங்களை அமலாக்கத் தொடங்கினான். அவனது அடியாள் படை நாடு முழுவதும் கலவரத்தை நடத்தியது. யூதர்கள் லட்சக்கணக்கில் கொத்து கொத்தாக படுகொலைச் செய்யப்பட்டனர். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன. யூதப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் குழந்தைளைக் கூட விட்டு வைக்காமல் கொன்றனர். மிச்சம் மீதி இருந்தவர்கள் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

இட்லரின் அடியாட்படைகள் ஆல்பிரடின் வீட்டையும் கொள்ளையடித்தனர். பிறகு தீ வைத்தனர். ஆல்பிரடின் அண்ணி ஒரு கர்ப்பிணி. வெறி பிடித்த பாசிஸ்டுகள் அவள் வயிற்றைக் கிழித்தனர். (இவர்களுடைய வாரிசுகளும் குஜராத்தில் இதைத்தான் செய்தனர்) கருவை வெட்டித் துண்டாக்கி நெருப்பில் வீசினர். அண்ணியைக் காப்பாற்றப் போராடிய ஆல்பிரடின் மண்டை உடைக்கப்பட்டது. அவனது அண்ணனின் கையும் கால்களும் கட்டப்பட்டு நெருப்பில் வீசப்பட்டான். ஒரு நாய் வண்டிக்குள் வீசப்பட்ட ஆல்பிரடும் சிறை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டான். 30 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். 30 இலட்சம் யூதர்கள் சிறை முகாம்களில் வதைக்கப்பட்டனர்.

யூதர்களை அழிக்கும் போதே கம்யூனிஸ்டுகளையும் ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகள் தொடங்கின. இட்லர் கம்யூனிசத்தை அடியோடு வெறுத்தான். கம்யூனிஸ்டு கட்சியோ உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கப் போராடியது. உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த முதலாளிகள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆயினர். உழைத்த மக்கள் மேலும் லேலும் ஏழைகள் ஆயினர். இட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலாளார்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டது. வேலை நேரம் 12 முதல் 16 மணி நேரமாக அறிவிக்கப்பட்டது. உழைப்பாளிகள் போராடி பெற்ற அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் கலைக்கப்பட்டன. உரிமைக்காக போராடும் மக்களை அடித்து நொறுக்கியது பாசிச இட்லரின் அடியாள் படை. இதற்கெல்லாம் நன்றி கடனாக இட்லரின் ஆட்சிக்கு முதலாளிகள் முழு ஆதரவு அளித்தனர். பாசிச இட்லரின் அடியாள் படைக்குப் பணத்தை வாரியிறைத்தனர். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.

முதலாளிகளோ வேலை நேரத்தை அதிகரித்து தொழிலாளர்களைக் கசக்கி பிழிந்தனர். தொழிலாளர் தலைவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் பிடித்து பாசிஸ்டுகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல் தொழிலாளர்களுக்காக போராடிய தோழர் ரூடியின் தலைக்கும் குறி வைத்தான் அவனுடைய முதலாளி. ஆனால் ரூடியை பிடிக்க முடியவில்லை. கம்யூனிஸ்டு கட்சியின் திட்டப்படி தலைமறைவு ஆனார். சோர்ந்து போய்க் கிடக்கும் மக்களை தட்டி எழுப்பிப் போராடுவதற்கு உணர்வூட்டும் பணியை இரகசியமாக மேற்கொண்டார்.

ஆனால் ரூடியின் குடும்பத்தினர் தப்பிக்க முடியவில்லை. ரூடியின் மனைவியும் குழந்தைகளும் வீட்டோடு வைத்து கொளுத்தப்பட்டனர். இப்படி பல இலட்சம் கம்யூனிசப் போராளிகளும் ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர்.

இட்லரின் இரத்தவெறி இதோடு அடங்கவில்லை தன்னுடைய பாசிசக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத அனைவரையும் கொலை செய்தான். பாசிஸ்ட் கட்சியைத் (நாஜிக் கட்சி) தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. பத்திரிக்கைச் செய்திகள் பாசிஸ்டுகளால் தணிக்கைச் செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட்டன. நீதிபதிகளாக இட்லரின் கைக்கூலிகள் அமர்த்தப்பட்டனர்.

பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. மாணவர்களுக்கு அறிவியல் கருத்துகளுக்குப் பதிலாக பிற்போக்குக் கருத்துகள் போதிக்கப்பட்டன. ஜெர்மனி முழுவதும் திறந்தவெளிச் சிறையாக மாற்றப்பட்டது. உழைக்கும் மக்கள் அனைவரும் அடிமையாக்கப்பட்டனர். பாசிஸ்டுகளோ எக்காளமிட்டனர்.

3. சோவியத் ரசியாவையும் - ஸ்டாலினையும் அழிக்க நினைத்த வல்லூறுகள்

உலகம் முழுவதும் ஜனநாயகத்தையும், மனித நேயத்தையும் நேசிக்கும் மக்கள், இட்லரின் வெற்றியால் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் மகிழ்ச்சி அடைந்தன. ஏகாதிபத்தியவாதிகளால் இட்லர் போற்றி புகழப்பட்டான். இட்லரின் பாசிசப் படைக்கு இலவசமாக ஆயுதங்கள் வழங்கினார்கள். மிக உயர்ந்த இராணுவத் தொழில் நுட்பங்களைக் கற்று கொடுத்தனர். இதைப் பயன்படுத்தி உலகின் மிகப் பெரிய இராணுவத்தை இட்லர் உருவாக்கினான்.

மனித மிருகமான இட்லரை ஏகாதிபத்திய நாடுகள் ஏன் வளர்த்துவிட்டன? உலகின் முதல் சோசலிச நாடான சோவியத் ரஷ்யாவை ஒழித்துக் கட்ட வேண்டும். லெனினுக்குப் பிறகு சோசலிசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்ட தோழர் ஸ்டாலினையும் கொலை செய்ய வேண்டும். இதுவே அந்த நாடுகளின் விருப்பம். இட்லரும் சோவியத் ரஷ்யாவைத் தோற்கடித்து அடிமையாக்கப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்தான்.

சோவியத் ரஷ்யாவை அழிப்பதில் இந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏன் இவ்வளவு வெறி?

ரஷ்ய தொழிலாளர்கள் தோழர் லெனின் தலைமையில் புரட்சி செய்து நவம்பர் 7, 1917இல் அதிகாரத்தை கைபற்றினர். ஆயிரம் பேர் பட்டினியாக சாகவும், அவர்களை சுரண்டும் ஒருவன் சுகபோகமாக வாழவும் காரணமாக இருந்த சுரண்டல் ஒழிக்கப்பட்டது. ஆற்றலுக்கு ஏற்ற உழைப்பு; உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற கோட்பாடு அமலுக்கு வந்தது. சோசலிச (சமத்துவ) சமூகம் அமைக்கப்பட்டது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற நிலைமை ஏற்பட்டது.

சோவியத் ரஷ்யாவை அழிப்பது போலவே தோழர் ஸ்டாலினையும் எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இட்லரும் அவரை தனது சொந்த எதிரியாகக் கருதினான். எல்லா நாட்டு முதலாளிகளின் பத்திரிக்கைகளும் ஸ்டாலினைப் பற்றி அவதூறான செய்திகளையேப் பரப்பின. முதலாளித்துவ சுரண்டல் பேர்வழிகளோ அவர் மீது வெறுப்பைக் கக்கினர். அப்படி என்றால் யார் இந்த ஸ்டாலின்? ஏன் அவரை மட்டும் இவர்கள் இப்படி வெறுக்க வேண்டும்?

பணக்கார நாடுகளிலோ ஒருவன் பணக்காரன் என்றால் ஆயிரமாயிரம் பேர் ஏழைகள். அத்தனைப் பேரையும் சுரண்டித்தான் ஒருவன் கொழுக்கிறான். சோவியத் ரஷ்யாவின் சாதனைகளைப் பற்றி இந்த நாடுகளில் உள்ள ஏழைகள் கேட்டறிந்தனர். அதற்குக் காரணமான கம்யூனிசத்தையும் புரட்சியையும் நேசித்தனர். இது தான் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலாளிகளை பீதியில் தள்ளியது. தங்கள் நாட்டிலும் தொழிலாளர்கள் புரட்சியை நடத்திவிடிவார்களோ என்று அஞ்சினர். ஏழைகளைச் சுரண்டிக் கொழுப்பதற்கு தாங்கள் பெற்றிருக்கும் அதிகாரத்தை தொடர்ந்துப் பாதுகாக்க எதையும் செய்யத் தயாராக இருந்தனர். அதனால் தான் சோவியத் ரஷ்யாவை அழிக்க இட்லருக்கு எல்லாவித உதவிகளையும் செய்தனர்.

அதுமட்டுமல்ல, இந்த பணக்கார நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க ஏழை எளிய நாடுகளைச் (காலனி நாடுகள்) சுரண்டிக் கொள்ளை அடித்தே பணக்கார நாடுகள் (ஏகாதிபத்திய நாடுகள்) செல்வங்களைக் குவித்தன. சோவியத் ரஷ்யாவோ இவர்கள் அடிமைப்படுத்திய ஏழைக் நாடுகளின் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தது. அதற்கான சகல உதவிகளையும் செய்தது. அடிமைத்தனத்தையும் அறுத்தெறியும் கலையைக் கற்று கொடுத்த சோவியத் ரஷ்யாவைக் கண்டு பீதியடைந்த ஏகாதிபத்திய நாடுகள் இட்லரை ஆதரித்தன.

4. யார் இந்த ஸ்டாலின்?

தோழர் ஜோசப் ஸ்டாலினோ ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன். ரஷ்யாவின் ஜார்ஜிய மாகாணத்தில் 'கோரி' என்ற நகரத்தில் 1879 டிசம்பர் 21-ந் தேதி பிறந்தார். தாயார் பணக்கார வீடுகளில் சமையல் வேலை பார்த்தார். கொடிய வறுமையில் ஸ்டாலின் வளர்த்தார். பட்டினியின் நடுவே படித்தாலும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார். மகனை மேல் படிப்புப் படிக்க வைத்திட வேண்டும் என ஸ்டாலினுடைய தாயார் இரவு பகல் பாராமல் உழைத்தார். இறுதியாக பாதிரியார் படிப்பிற்கான கல்லூரியில் தனது மகனை சேர்த்து விட்டார்.

அந்த பாதிரியார் கல்லூரியோ ஒடுக்குமுறைகளின் மொத்த உருவமாக இருந்தது. ரஷ்ய மன்னனான ஜாருக்கு சேவகம் செய்யப், படித்த அடிமைகளை உருவாக்குவதே அக்கல்லூரியின் நோக்கம். மாணவர்கள் சிறைக் கைதிகளைப் போல நடத்தப்பட்டனர். ஸ்டாலின் அக்கல்லூரியை வெறுத்தார். அதே நேரம் அருகில் இருந்த ஒரு நூலகத்திலிருந்து ஏராளமான நூல்களை எடுத்துப் படித்தார். அப்படி அவர் எடுத்துப் படித்த நூல்களில் ஒன்று தான் காரல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்".

அந்த நூல் தான் ஸ்டாலினுடைய வாழ்க்கையில் அவர் போக வேண்டியப் பாதையைக் காட்டியது. ஒரு சிலர் மட்டும் எல்லா செல்வங்களையும் அபகரித்துக் கொள்ள மற்றவர்கள் வறுமையில் வாடும் நிலை ஏன் ஏற்பட்டது என "மூலதனம்" விளக்கியது. ஒரு புரட்சியின் மூலம் தான் உழைக்கும் மக்கள் தங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என அது வழிகாட்டியது.

மார்க்ஸ் காட்டிய கம்யூனிசப் பாதையை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். அதே காலகட்டத்தில் லெனின் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிக் கொண்டிருந்தார். ரஷ்யா முழுவதும் கம்யூனிசக் குழுக்கள் உருவாக்கபட்டன. தன்னுடைய ஊரிலும் ஸ்டாலின் அத்தகைய குழுக்களைத் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கினார். அறியாமை இருளில் தடுமாறிக் கொண்டிருந்த உழைப்பாளிகளுக்குப் புரட்சி பற்றிய அறிவியலைப் போதித்தார்.

ஸ்டாலினுடைய கடின உழைப்பிற்கு நல்ல பலனும் கிடைத்தது. ரஷ்யாவில் ஜார் மன்னனது கொடுங்கோலாட்சிக்கு எதிராக 1901-ஏப்ரலில் ஜார்ஜியத் தொழிலாளர்கள் ஸ்டாலின் தலைமையில் போராட்டத்தில் இறங்கினர். போராட்டம் தோல்வியில் முடிந்தாலும், தொழிலாளர் வர்க்கம் சோர்ந்து விடவில்லை. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஸ்டாலினை வேட்டையாட போலீசும், இராணுவமும் குவிக்கப்பட்டது. ஸ்டாலின் தலைமறைவு ஆனார்.

இப்போராட்டமானது ரஷ்யத் தொழிலாளர்களுக்கு உத்வேகமூட்டியது. இதற்கு தலைமை ஏற்று நடத்தியதன் மூலம் ஸ்டாலின் லெனினது கவனத்தை ஈர்த்தார். தன்னுடைய திட்டங்களை அமலாக்கிட ஒரு அருமையான செயல்வீரர் கிடைத்து விட்டதாக லெனின் மகிழ்ந்தார். அன்று தொடங்கிய லெனின் ஸ்டாலின் தோழமையுறவு இறுதி வரைத் தொடர்ந்தது.

முழு நேரப் புரட்சியாளராக மாறிய ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துகளை ரஷ்யா முழுவதும் பரப்பினார். அவரது உழைப்பின் பயனாக நாடு முழுவதும் கட்சியின் கிளைகள் உருவாக்கப்பட்டன. இதனால், ஸ்டாலினை ஒழித்துக் கட்ட ஜாரின் போலீசு அதிக தீவிரம் காட்டியது. அவர் ஆறு முறை கைது செய்யப்பட்டு சைபீரியப் பனிப் பாலைவனத்திற்கு அனுப்பப்பட்டார். ஒவ்வொரு முறையும் அவர் சிறையில் இருந்து தப்பினார்.

வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்த லெனின் அங்கிருந்து திட்டங்களை வகுத்துக் கொடுத்து கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தினார். ரஷ்யாவில் அவற்றை நிறைவேற்றும் பொறுப்பை ஒரு தலைமை குழுவிடம் ஒப்படைத்தார். ஸ்டாலின் அக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லெனின் திட்டங்களைத் தீட்டினார். ஸ்டாலின் அதனை நிறைவேற்றினார். அவர்களின் உழைப்பின் பயனாக நவம்பர் 7, 1917இல் உழைக்கும் மக்கள் எதிர்நோக்கிய நாள் வந்தது. புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. சுரண்டல் ஒழிக்கப்பட்டது. சோசலிசம் மலர்ந்தது. பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. லெனினது தலைமையில் வறுமையை ஒழித்து முதன்முதலாக பூமியில் ஒரு சொர்க்கத்தைப் படைக்கும் முயற்சியில் சோவியத் ரஷ்ய மக்கள் ஈடுபட்டனர். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் சோசலிச சமூகத்தைத் தானே உழைப்பவர்களின் சொர்க்கம் என்று சொல்வதுப் பொருத்தமாக இருக்க்கும். ஆனால் அந்த முயற்சியின் ஒவ்வொரு அடியிலும் எதிரிகள் குறுக்கிட்டனர்.

5. எதிரிகளின் சதியும், அதை முறியடித்த வரலாறும்!

ஆட்சி இழந்த முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் உள்நாட்டுப் போரை ஏற்படுத்தினர். சோசலிசத்தை ஒழிக்க 21 ஏகாதிபத்திய நாடுகள் படை எடுத்தன. உள்ளுக்குள் இருந்த துரோகிகள் நாச வேலைகளைச் செய்தனர். எங்கும் குழப்பமான சூழ்நிலை நிலவியது. சோவியத் ரஷ்யா அபாயகரமான நாட்களைக் கடந்து கொண்டிருந்தது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு பதிலடிக் கொடுக்க லெனின், "செம்படை" என்னும் மக்கள் படையை உருவாக்கினார்.

செம்படையின் தலைமைத் தளாபதியாக இருந்தவர் டிராட்ஸ்கி. அவர் முதலாளிகளின் கையாள். கம்யூனிஸ்ட் என வேடமிட்டு மற்றவர்களை ஏமாற்றிய நயவஞ்சகர். ஆரம்பத்தில் செம்படை அடைந்த தோல்விகளுக்கு இவரது துரோகமே காரணம். இதனை புரிந்து கொண்ட லெனின், தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஸ்டாலினை முக்கியமான போர்முனைக்குத் தளபதியாக அனுப்பி வைத்தார்.

ஸ்டாலின் தலைமை ஏற்றுக் கொண்ட பின்பு சீர்கேடுகள் களையப்பட்டன. செம்படையில் கட்டுப்பாடும், கம்யூனிச ஒழுக்கமும் நிலை நிறுத்தப்பட்டன. செம்படை வெற்றி நடைப்போடத் தொடங்கியது. 21 கொள்ளைக்கார நாடுகளின் படைகள் தோற்று ஓடின. லெனின் - ஸ்டாலின் தலைமையில் சோவியத் மக்கள் வெற்றிப் பெற்றனர்.

இப்படிப்பட்ட மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் சோவியத் மக்களை பேரிடி தாக்கியது. உலகின் முதல் தொழிலாளர் வர்க்க அரசை அமைத்த தோழர் லெனின் 1924ஆம் ஆண்டு சனவரி 21ஆம் நாள் மரணமடைந்தார். உழைக்கும் மக்கள் துயரக் கடலில் ஆழ்ந்தனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்ட முன்னாள் பணக்காரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழித்துக் கட்ட புதிய வியூகம் வகுத்தனர். அவர்கள் தங்களது அடையாளங்களை மறைத்துக் கொண்டுத் தொழிலாளர்களைப் போல வாழ முனைந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தனர். அதன் தலைமையைக் கைப்பற்றி புரட்சியைக் குழி தோண்டிப் புதைக்க முயற்சி செய்தனர். அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றனர். டிராட்ஸ்கி போன்ற துரோகிகள் அவர்களுக்கு வழிகாட்டினர்.

லெனின் இறந்த பிறகு சோவியத் ரஷ்யாவை வழிகாட்ட சரியான தலைவர் இல்லை என்று இக்கூட்டம் மகிழ்ச்சியில் திளைத்தது. சதித்திட்டங்கள் மூலம் அதனை வீழ்த்திட முடியும் என்றும் நம்பியது.

ஆனால் எதிரிகளின் கனவுகளைத் தகர்த்து தரைமட்டமாக்கினார் ஸ்டாலின். எதிரிகளின் திட்டங்கள் ஒவ்வொன்றையும் மண்ணைக் கவ்வ வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் ஊடுருவி இருந்த எதிரிகள் அம்பலப்படுத்தப்பட்டனர். கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர். மக்களுக்கு எதிராக அவர்கள் புரிந்த குற்றங்களுக்காகத் தண்டிக்கபட்டனர். அரசு அதிகாரத்தில் உழைக்கும் மக்களின் தலைமை தக்க வைக்கப்பட்டது. சோவியத்தின் சோசலிசப் பொருளாதாரத்தைப் புனரமைக்க உலகப் புகழ்மிக்க ஐந்தாண்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார் ஸ்டாலின். மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் என்னென்ன என்பதை உழைக்கும் மக்கள் முடிவு செய்தனர். அவை எவ்வளாவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதையும் அவர்களே திட்டமிட்டனர்.

ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் புதிய தொழிற்சாலைகள் நிர்மானம் செய்யப்பட்டன. தரிசு நிலங்கள் மனிதர்களின் உழைப்பால் விளை நிலங்கள் ஆக்கப்பட்டன. வெள்ளப் பெருக்கையும், அழிவையும் ஏற்படுத்தும் ஆறுகளின் திசைகளை மாற்றினர். உபரி நீர், வாய்க்கால்கள் மூலம் பாலைவனங்களில் பாய்ந்தது. பாலைவனங்கள் சோலைவனங்களாயின. தொழிற்சாலைகளையும், கூட்டுப் பண்ணைகளையும் சுரங்கங்களையும் உழைக்கும் மக்களே நிர்வகித்தனர்.

உற்பத்தியைப் பெருக்க உழைக்கும் மக்கள் புதிய உத்திகளைக் கையாண்டனர். புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. உற்பத்தி பெருகியது. செல்வம் கொழித்தது. அந்த செல்வம் அனைவருக்கும் உழைப்புக்கேற்ப பகிர்ந்தளிக்கப்பட்டது. வறுமை என்பது பழங்கதையானது. பூமியின் சொர்க்கமாக சோவியத் ரஷ்யா மாற்றப்பட்டது.

ஸ்டாலினுடைய தொலைநோக்கு பார்வை, தளராத மன உறுதி, மக்கள் மீதான நேசம், ஒப்பிட முடியாத தலைமை குணம் போன்றவையே இவ்வெற்றிக்குக் காரணமாகும்

உலகம் முழுவதும் இருந்த சுரண்டல் கூட்டம் இதைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டது. ஸ்டாலின் உயிருடன் இருக்கும் வரை தங்களால் உழைக்கும் மக்களை சுதந்திரமாகச் சுரண்ட முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாக தெரிந்தது. அதனால் தான் ஸ்டாலினை ஒழித்துக் கட்ட அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் இட்லருக்கு உதவி செய்தன.

இட்லரைத் தீனி போட்டு ஜல்லிக் கட்டு காளையைப் போல வளர்த்தன. வெறியூட்டப்பட்ட அந்த காளை ஸ்டாலினையும், சோவியத் ரஷ்யாவையும் குத்தி கிழிக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்ன?

6. இட்லரின் கோரமுகம்!


இட்லரின் நோக்கம் சோவியத் ரஷ்யாவை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமல்ல பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா பொன்ற ஏகாதிபத்திய நாடுகளின் காலனிய நாடுகளான ஆசிய, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளையும் அபகரிக்க வேண்டும் என்பதும் அவனுடைய நோக்கமாக இருந்தது.

இத்திட்டத்திற்கு குறுக்கே நின்றது சோவியத் ரஷ்யா மட்டும் தான். அதை வீழ்த்துவது எளிதான காரியமல்ல என அவனுக்குத் தெரியும். அதனால், முதலில் பிற ஐரோப்பிய நாடுகளை அடிமைப்படுத்தி அவற்றின் வளங்களைப் பயன்படித்தி சோவியத்தின் மீது படையெடுக்கத் திட்டம் தீட்டினான்.

ஜெர்மனியைப் போலவே இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தனர். இட்லர் அவர்களோடு இராணுவக் கூட்டணி அமைத்துக் கொண்டான். அதன் பின்னரே தனது கோரமுகத்தை வெளிபடுத்தினான்.

1937இல் ஸ்பெயினில் உழைக்கும் மக்கள் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த மக்கள் குடியரசு இட்லரின் கண்களை உறுத்தியது. அவனுடன் இத்தாலிய பாசிஸ்ட் முசோலினியும் சேர்ந்து கொண்டான். இரு நாட்டு படைகளும் ஸ்பெயினை ஆக்கிரமித்தன. மக்கள் குடியரசு கலைக்கப்பட்டது. பாசிசப் பேயாட்சி தொடங்கியது. ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் காக்கப் போரிட்ட லட்சக்கணக்கானப் போராளிகள் கொல்லப்பட்டனர்.

அடுத்ததாக 1938ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரியா மீது படையெடுத்தான். ஜெர்மன் ராணுவத்தின் மிருக பலத்தின் முன் நிற்க முடியாமல் ஒரே நாளில் ஆஸ்திரியா சரணடைந்தது. அதே வேகத்தில் செக்கோஸ்லோவாகியா மீது படையெடுத்து பாதி நாட்டைப் பிடித்துக் கொண்டான்

இட்லரின் கோரமுகம் வெளிப்பட்டவுடன் உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் அவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சோவியத் ரஷ்யா இதில் முன்னணிப் பாத்திரம் வகித்தது. இட்லரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ராணுவக் கூட்டணி அமைக்க பிரிட்டன், பிரான்சு, அமெரிக்க நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்.

அந்தந்த நாடுகளின் மக்களும் இதையே விரும்பினார். ஆனால் முதலாளிகளோ பாட்டாளிகளின் தலைவரான ஸ்டாலினுடன் கூட்டணி அமைப்பதை நிராகரித்தனர். மாறாக இட்லருடன் புதிய நட்புறவு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டனர்.

ம்யூனிச் ஒப்பந்தம் என்ற இந்த துரோக ஒப்பந்தம் இட்லரின் ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்தியது. பிரிட்டனும் பிரான்சும் தன்னை ஒன்றும் செய்யாது என்பதைப் புரிந்து கொண்ட இட்லர் மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தினான்.

செப்டம்பர் 15, 1939இல் செக்கஸ்லோவாகியாவை முழுமையாக ஆக்கிரமித்தான். 5 நாள் கழித்து லித்வேனியாவை வீழ்த்தினான். அதே வேளையில் இத்தாலியோ அல்பேனியாவையும், லிபியாவையும் வீழ்த்தியது. சீனா மங்கோலியா மற்றும் இதர கிழக்காசிய நாடுகளை ஜப்பான் அடிமைப்படுத்தியது.

இதே ஆண்டு செப்டம்பர் மாதம் இட்லர் போலந்தை ஆக்கிரமித்தான். ஒரே நாளில் டென்மார்க், நார்வே, ஹாலந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளையும் விழுங்கினான். நார்வேக்கு ஆதரவாக பிரிட்டன் தனது கடற்படையை அனுப்பியது. ஆனால் பாசிஸ்டுகளின் படைபலத்தைக் கண்டதும் போரிடாமலே பின்வாங்கியது.

ஜெர்மனிக்கு இணையான ஆயுதபலம் கொண்டது பிரான்சு. அதனால் கூட பாசிஸ்டுகளின் மூர்க்கத்தனத்தின் முன் நிற்க முடியவில்லை. சுமார் இருபது நாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரான்சு ஒரு சில நாட்களிலேயே இட்லரின் காலில் விழுந்தது. யுகோஸ்லோவியா, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா போன்ற நாடுகளின் கதையும் முடிந்து விட்டது. பிரிட்டன் சோவியத் ரஷ்யாவைத் தவிர மற்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இட்லரின் காலடியில்.

அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் செல்வங்கள் கொள்ளையிடப்பட்டு ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டது. தேசபக்தர்கள், கம்யூனிஸ்டுகள், யூதர்கள், கறுப்பர்கள் என லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்பாவி பொதுமக்களை சித்ரவதை செய்துக் கொல்வது பாசிஸ்டு படைகளின் பொழுது போக்கு ஆனது. படுகொலைகள், தீ வைப்பு, பாலியல் வன்முறைகள் என நெருப்பில் வெந்தது ஐரோப்பா.

மற்ற கண்டங்களின் மீது பாய்ந்து கடித்துக் குதற பாசிஸ்டுகள் தயாரிப்பில் இறங்கினர். வரப்போகும் அபாயம் உலக மக்களுக்கு உறைத்தது. பீதியில் இரத்தம் உறைந்தது.

அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என ஒதுங்கிக் கொண்டன. இட்லருடன் ரகசியமாக ஒப்பந்தம் செய்து கொள்ளவும் முயற்சித்தன. உலகையே பாசிச இருள் சூழ்ந்த நேரத்தில் கலங்கரை விளக்கமாக இருந்து ஒளியூட்டியது சோவியத் ரஷ்யா. அந்த நேரத்தில் உலகின் உழைக்கும் மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தது சோவியத் ரஷ்யாவும் ஸ்டாலினும் தான்.

அந்த் நம்பிக்கைக்கும் சோதனை வந்தது. 22 ஜூன் 1941. நள்ளிரவு நேரம் 50 லட்சம் பேர் கொண்ட பாசிஸ்டுகளின் படைகள் கள்ளத்தனமாக ரஷ்யாவிற்குள் நுழைந்தன.

7. இட்லரின் கனவு தகர்க்கப்பட்டது!

காத்யன் ஒரு எல்லையோர நகரம். பாவெல் தனது குழந்தைகளுடன் காலை உணவருந்திக் கொண்டிருந்தான். வானத்தில் பேரிரைச்சல். எந்திரங்களின் ரீங்காரம் இதயத்தை அதிர வைத்தது. பாவெல் வெளியே ஓடி வந்து பார்த்தான். ஆயிரக்கணக்கான ஜெரிமன் போர் விமானங்கள் வானத்தை ஆக்கிரமித்திருந்தன. ஒரே நேரத்தில் பல ஆயிரம் குன்டுகள் நகரத்தில் விழுந்தன. ஒவ்வொரு குண்டும் எரிமலையாக வெடித்தது. நகரம் சிதைந்தது. பின் எரிந்தது.

பாவெல் சுதாரித்துக் கொள்வதற்குள் அவனது வீடு தரைமட்டமாகியது. அவன் கண்ணெதிரிலேயே அவனுடைய குழந்தைகள் இறந்தனர். துயரப்படக் கூட அவனுக்கு நேரமில்லை. ஒரு சூடான பொருள் அவன் பின் ,மண்டையைத் தாக்கியது. பாவெல் மயங்கி விழுந்தான். காத்யன் நகரம் சுடுகாடாக மாறியது. ஒரு சிலரே தப்பிப் பிழைத்தனர்.

சோவியத் ரஷ்யாவின் ஆயிரக்கணக்கான ஊர்கள் இதே முறையில் அழிக்கப்பட்டன. என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் முன்னரே அத்தனையும் அழிந்தது. இட்லரின் படைகள் சோவியத்தின் மீது படையெடுத்து இருக்கின்றன என்பதை அதன் பின் தான் சோவியத் மக்களும், உலக மக்களும் தெரிந்து கொண்டனர்.

இந்த திடீர் தாக்குதலை எல்லைப்புறத்தைக் காத்து நின்ற சோவியத் படைகள் தீரத்துடன் எதிர்த்து போரிட்டன. இருந்தும் எதிரியின் ஆயுதபலத்தின் முன்னால் அவற்றால் அதிக நேரம் தாக்கு பிடிக்க இயலவில்லை. செம்படை மெதுவாக பின்வாங்கியது. சோசலிசத் தாய்நாட்டைப் பாதுகாக்க பாவெல் செம்படையில் சேர்ந்தான். பல லட்சம் உழைக்கும் மக்கள் செம்படையில் இணைந்தனர். இருந்தும் செம்படைவை சரி செய்ய முடியவில்லை.

ஜெர்மனி மட்டும் தன் ஆயுத பலத்தை அதிகரித்தது? சோவியத்தால் ஏன் அதை செய்ய முடியவில்லை? எல்லோர் மனதிலும் எழுந்த கேள்விகள் இவை. ஆனால் பதில் மிக எளிமையானது. ஜெர்மனி ஒரு முதலாளித்துவ பாசிச நாடு. பாசிஸ்டுகள் நாட்டின் வளங்களைக் கொண்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயற்சிப்பதில்லை. மாறாக ஆயுதங்களை உருவாக்கினர். கொடிய வறுமையில் மக்களைத் தள்ளினர்.

இட்லர் ஆயுதங்களை உருவாக்கிக் கொண்டு இருந்த அதே நேரத்தில் ஸ்டாலினோ சோவியத் ரஷ்யாவின் வளங்களைக் கொண்டு ஆலைகள் அமைத்தார். வேலையினமையை ஒழித்தார். மருத்துவ வசதிகளைப் பெருக்கினார். போக்குவரத்து வசதிகளை உருவாக்கினார். பள்ளிகூடங்களை கட்டினார். கல்லாமையை ஒழித்தார். ஆற்றல் நிறைந்த புதிய மனிதர்களை உருவாக்கினார். புதிய சமூகத்தைப் படைத்தார்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய பிறகு, எஞ்சியிருந்த வளங்களைக் கொண்டு குறைந்த அளவே ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் தான் இட்லர் தொடக்கத்தில் ஆயுத மேலாண்மை பெற்றிடுந்தான். எனினும், பாசிசத்தின் பிரமாண்ட ஆயுத பலத்தை நிர்மூலமாக்க எளியு ஆயுதங்களுடன் செம்படை வீரர்கள் வீரச்சமர் புரிந்தனர். பாசிஸ்டுகள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்தனர். மற்ற நாடுகளை வீழ்த்தியதைப் போல் எளிதாக சோவியத்தை வீழ்த்த முடியவில்லை.

இரண்டு வாரங்களில் சோவியத்தை மண்டியிட வைப்பதாக ஊளையிட்டான் இட்லர். வாரங்கள் மாதங்களாயின. இட்லரின் கனவு பலிக்கவில்லை. ஒப்பில்லாத தியாகங்கள் மூலம் தங்கள் தாய் நாட்டைப் பாதுகாத்தனர். சோவியத் ரஷ்யாவின் உழைக்கும் மக்கள்.

8. தோல்வியை முறியடித்த ஸ்டாலின்!

இட்லரது எதிர்பாராத அதிரடித் தாக்குதலால் ஆரம்பத்தில் சோவியத் ரஷ்யா நிலைகுலைந்தது என்னவோ உண்மை தான். எங்கும் குழப்பம் நிலவியது. ஒரு சில புல்லுருவிகள் இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி மக்களிடையே பீதியைக் கிளப்பிவிட்டனர். புதிய புரளிகள் உருவாக்கப்பட்டன. ஸ்டாலின் நாட்டைவிட்டி ஓடிவிட்டார் என்ற வதங்திகள் கூட பரப்பப்பட்டன. செம்படையின் தொடந்த பின்வாங்கல் மக்களிடம் சோர்வை ஏற்படுத்தியது. தோல்வி மனப்பான்மை வளரத் தொடங்கியது.

மக்களின் பயத்தைப் போக்கி நம்பிக்கை ஊட்ட வேண்டும். சோர்ந்து போனவர்களுக்குத் தெம்பூட்ட வேண்டும். பின்வாங்கும் செம்படைகளின் கட்டுப்பாட்டை மேலும் உயர்த்த வேண்டும். அதன் தொடக்கக் கட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டும். புதிய வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் ஆயுதத் தளவாடங்களைப் பல நூறு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். செம்படை வீரர்களின் மன உறுதி மேலும் வலிமையாக்கப்பட வேண்டும். பீதியை கிளப்பும் எதிரிகளின் எடுபிடிகளையும். உளவாளிகளையும் தனிமைப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உழைக்கும் வர்க்க முன்னணிப் படையாகிய கம்யூனிஸ்ட் கட்சியில் ராணுவக் கட்டுபாட்டை ஏற்படுத்த வேண்டும். இவ்வேலைகளைச் செய்யாமல் போனால் நாடு அடிமைப்படுத்தப்படும்.

இந்த வேலைகள் எளிமையானவை அல்ல. அதுவும் நாடு முழுவதும் எரிந்து கொண்டும், வெடித்துச் சிதறிக் கொண்டும் இருந்த நேரத்தில் இது மேலும் கடினமானது. சாத்தியம் அற்றது என்று கூட சொல்லலாம். சாதாரண மனிதர்களாலோ, தலைவர்களாலோ செய்யவே முடியாத காரியம். ஆனால் இதை ஸ்டாலினால் சாதிக்க முடுயும் என உணர்ந்த மக்கள் அவரை செம்படையின் தலைமைத் தளபதியாகத் தேர்ந்தெடுத்தனர்.

ஸ்டாலினுடைய தலைமையின் கீழ் சோவியத் ரஷ்யா தன் எதிரியை வீழ்த்த தன்னைத் தயார்படுத்திக் கொண்டது. தேசத்தின் மேற்குப் பகுதி எதிரியால் அச்சுறுத்தப்பட்டதால், அங்கிருந்த தொழிற்சாலைகள் அனைத்தையும் கிழக்குப் பகுதிக்கு இடம் பெயர்க்க உத்திரவிட்டார் ஸ்டாலின். ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ஆலைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. பிரம்மாண்டமான எந்திரங்களின் பிரிக்கப்பட்டப் பாகங்களைச் சுமந்து சென்றனர் தொழிலாளர்கள். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள், காடுகள், மலைகள், பனிப்பாலைவனங்கள் என எல்லா இடர்பாடுகளையும் கடந்து லட்சக்கணக்கான தொழிலாளார்கள் தங்களின் எந்திரங்களோடு நாட்டின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

எந்திரங்கள் ஒன்று சேர்க்கப்பட்டன. பெரும் ஆலைகள் எழுந்தன. அவை ஆயுதத் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டன. எந்திரத் துப்பாக்கிகள், டாங்குகள், போர்விமானங்கள் முதலிய நவீனரக ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

சோசலிசத்தைப் பாதுகாக்க கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களை செம்படையில் சேருமாறு அறைகூவல் விடுத்தார் ஸ்டாலின். அதை ஏற்று 50 லட்சம் கம்யூனிஸ்டுகள் செம்படையில் சேர்ந்தனர். அபாயகரமான போர்முனைகளில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் முன்னணியில் நின்றனர். தங்கள் வீரத்தாலும் தியாகத்தாலும் மற்ற வீரர்களுக்கு உணர்வூட்டினர்.

எப்போது வேண்டுமானாலும் மாஸ்கோவை எதிரிகள் கைப்பற்றக்கூடம். அதனால், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மாஸ்கோவை விட்டு வெகு தொலைவிற்கு மாற்றப்பட்டன. அதிகாரிகளும் அமைச்சர்களும் அங்கு குடிபெயர்ந்தனர். ஸ்டாலினையும் மாஸ்கோவையும் விட்டு வெளியேற அனைவரும் நிர்பந்தித்தனர். ஸ்டாலின் இதற்கு சம்மதிக்கவில்லை. இறுதிவரை அதில் உறுதியாக இருந்தார்.

இதுவே மக்கள் மனவலிமை இழக்காமல் இருந்ததற்கு காரணம், சோதனைகளை வெற்றியாக மாற்றும் திறமை அவருக்கு உண்டு என்பதில் மக்கள் உறுதியாக இருந்தனர். சோவியத் ரஷ்யாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஸ்டாலின் இருந்தார். தான் மட்டும் பாதுகாப்பாக மாஸ்கோவைவிட்டு வெளியேறினால், அது மக்களின் மன உறுதியைக் குலைக்கும் என்று உணர்ந்தார். ஆகவே பாட்டாளி வர்க்க தலைவர் ஸ்டாலின் செம்படையுடன் உழைக்கும் மக்களுடன் மாஸ்கோவில் தங்கினார்.

இரவு பகலாக பல மாதங்கள் தொடர்ச்சியாக மாஸ்கோ தாக்கப்பட்டது. எப்போதும் அதன் மீது குண்டு மழை பெய்தது. செம்படை கம்யூனிஸ்டுக் கட்சி, அரசு நிர்வாகம் முதலியவற்றை இயக்கும் பொறுப்பை இதன் நடுவே தான் அவர் நடத்த வேண்டியிருந்தது. அவரது இந்த வீரச் செயல் நாட்டு மக்களுக்கு உத்வேகமூட்டியது.

இதைத் தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றினார். அதில் பெரிய சொல் அலங்காரம் இல்லை எளிமையாக பேசினார். சக தோழனிடம் பேசுவதைப் போல பேசினார். தங்கள் நட்டை மட்டுமல்ல, உலகத்தையே காப்பாற்றும் வரலாற்றுக் கடமை சோவியத் மக்களுக்கு இருக்கிறது என்றார். உலகையே அழிக்க வந்த பாசிஸ்டுகளை கம்யூனிஸ்டுகளால் மட்டுமே ஒழிக்க முடியும் என்ற உணர்வை ஊட்டினார். "இனி ஒரு அடி பின் வாங்க மாட்டோம் - கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரைப் போராடுவோம்" என்ற உறுதிமொழியை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்க வேண்டும் என்றுக் கட்டளையிட்டார். உரையைக் கேட்ட அனைவரையும் அந்தக் கட்டளை தீப்பொறி போல் பற்றிக் கொண்டது. மக்கள் மனதில் அந்த தீப்பொறி எரிமலையானது. அது போர்களத்திலும் வெளிப்பட்டது.

செம்படை உறுதியுடன் எதிர்த்தாக்குதல் தொடுத்தது. உயிரைத் துச்சமென மதித்து செம்படை வீரர்கள் வீரச்சமர் புரிந்தனர். பாவெலின் படைப்பிரிவு முற்றுகை இடப்பட்டது. 500 பேர் இருந்த படைப்பிரிவில் 60 பேர் மட்டுமே உயிருடன் எஞ்சியிருந்தனர். ஐந்து நாட்களாக உணவோ உறக்கமோ இல்லாமல் பாவெல் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவனது தலையிலும் தொடையிலும் கட்டுகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் துப்பாக்கியால் எதிரிகளின் டாங்கிகளை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தான். அவனது சிந்தனையில் ஒரு முழக்கம் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. "ஒரு அடி பின்வாங்க மாட்டோம் - கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரை போராடுவோம்".

ஜெர்மானிய போர் விமானங்கள் தாக்கத் தொடங்கின். எங்கும் கருப்புகையும் தூசியும் சூழ்ந்தது. செம்படை இருந்த அகழிகளில் பிணக்குவியல். விமானத்தாக்குதலைத் தொடர்ந்து ஜெர்மானிய டாங்கிகள் சுட்டபடி செம்படையின் அகழிகளை நோக்கி முன்னேறின. படைப்பிரிவின் கம்யூனிஸ்டுக் கட்சி அமைப்பாளர் கையில் ஒரு எறிகுண்டை எடுத்தார். உரக்க முழக்கமிட்டார். "கம்யூனிஸ்டு கட்டி வாழ்க! தோழர் ஸ்டாலின் வாழ்க! என்னைப் பின் தொடருங்கள் தோழர்களே."

அகழியின் மீது ஏறினார். ஜெர்மன் டாங்குகளை நோக்கி வேகமாக ஓடினார். பாவெலும் இதர வீரர்களும் எறிகுண்டுகளை எடுத்துக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து ஓடினார். முன்னால் ஓடிய கட்சி அமைப்பாளரை ஒரு பீரங்கி குண்டு சிதறடித்தது. பாவெல் ஒரு டாங்கியின் மீது தன் எறிகுண்டை வீசினான். டாங்கி வெடித்து சிதறியது. பாவெலின் தோழர்களும் இதே காரியத்தைச் செய்தனர்.

ஜெர்மானியர்களின் டாங்கிகள் தகர்க்கப்பட்டன. ஏராளாமான இழப்புகள் இருந்தாலும் அன்றைய சண்டையில் செம்படையின் கை ஓங்கியிருந்தது. ஜெர்மானியர்கள் மாஸ்கோவை விட்டு 100 கீலோ மீட்டருக்கு அப்பால் பின்வாங்கினர். முதல் முறையாக பாசிஸ்டுகளுக்கு பலத்த அடி விழுந்தது.

உலகப் போர் தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு உலக மக்களுக்கு இட்லரை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை சுடர்விட்டது. பிரிட்டன் - அமெரிக்க நாடுகளின் உழைக்கும் மக்கள் கொடுத்த நெருக்குதலின் காரணமாக அந்த நாடுகள் சோவியத் ரஷ்யாவுடன் நட்புறவு ஒப்பந்தம் செந்து கொண்டன. ஜெர்மனியில் தலைமறைவாக செயல்பட்டுக் கொண்டிருந்த பாசிச எதிர்ப்புப் போராளிகள் மாஸ்கோ சண்டையின் வெற்றியைக் கொண்டாடினர். ரூடி தன் தோழர்களிடம் சொன்னான்;

"சோவியத் ரஷ்யா வெற்றி பெறும் - உலக
உழைக்கும் மக்களுக்கு விடிவு வரும்!
தோழர் ஸ்டாலின் நீடூழி வாழ்க!"

9. செம்படையின் எழுச்சியும் இட்லரின் வீழ்ச்சியும்!

போர் இழுத்துக் கொண்டே சென்றது. இட்லர் சோவியத்தின் மீது படையெடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. செம்படை வீரர்கள் ஒரு கோடிக்கும் மேல் உயிர்த்தியாகம் செய்து தாய் நாட்டைக் காத்தனர். செம்படையின் வீரம் இட்லருக்கு ஆத்திரமூட்டியது. தான் கைபற்றிய மேற்கு ரஷ்யப் பகுதி மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் பாசிஸ்டுகள் வெறியாட்டம் போட்டனர். ஒவ்வொருவராக கொலை செய்யக் கூட இட்லருக்கு பொறுமையில்லை.

எனவே விஷ வாயுக் கொட்டடிகள் என்ற ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்தான். கொல்லப்பட வேண்டியவர்கள் ஒரு பெரிய கொட்டடியில் அடைக்கப்படுவர். காற்றோடு விஷ வாயு கலந்து செலுத்தப்படும். ஒரு நிமிடத்தில் பல்லாயிரம் பேர் மடிந்து போவார்கள். இதே போல பல கோடி மக்களை இட்லர் கொலை செய்தான்.

சோவியத்தைத் தோற்கடிக்க தன் போர்த்தந்திரத்தை மாற்றினான். இட்லர் தெற்கே அமைந்திருந்த ஸ்டாலின்கிராடு என்ற நகரத்தைத் தாக்கினான். அதைக் கைப்பற்றுவதன் மூலம் மேற்காசிய நாடுகளைப் பிடிக்க முடியும். அவற்றின் எண்ணெய் வளத்தை பயன்படுத்தி புதிய பலத்துடன் சோவியத் ரஷ்யாவைத் தாக்கி அழிக்க முடியும் என திட்டமிட்டான். (இந்தியாவை கைபற்றுவது கூட அவனுடைய திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.)

1942 செப்டம்பரில் ஸ்டாலின்கிராடு தாக்கப்பட்டது. தன்னுடைய மிகச்சிறந்த படைகளை இந்த போருக்கு அனுப்பி வைத்தான் இட்லர். தான் அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளின் படைகளையும் திரட்டி ஸ்டாலின்கிராடின் மீது ஏவினான்.

நாலாபுறங்களில் இருந்தும் ஸ்டாலின்கிராடு சூழப்பட்டது. கற்பனை செய்துக் கூட பார்க்க முடியாத கோரத்துடன் ஸ்டாலின்கிராடு தாக்கப்பட்டது. ஜெர்மானிய விமானப்படை நகரைத் தரைமட்டமாக்கியது. மண்மேடுகளுக்குப் பின்னால் இருந்து செம்படை தாக்கியது. ஸ்டாலின்கிராடின் உழைக்கும் மக்கள் ஆண்களும் பெண்களும் செம்படையுடன் சேர்ந்து போரிட்டனர். தங்களின் தலைவரின் பெயரில் அமைந்த நகரைக் காக்க ஒப்பில்லாத தீரத்துடன் அவர்கள் சண்டை செய்தனர்.

இந்த உக்கிரமான சண்டை 200 நாட்கள் நீடித்தது. பல லட்சம் செம்படை வீரர்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

பாசிஸ்டுகளுக்குப் பாடம் புகட்டப் புதிய திட்டமொன்றை ஸ்டாலின் வகுத்தார். முற்றுகையிடப்பட்ட செம்படையைக் கொண்டு அதிரடித் தாக்குதல் நடத்தி ஜெர்மானிய படையை சுற்றி வளைத்து கொள்வது என்பது தான் அந்த திட்டம். இதை செய்து முடிக்க வீரர்கள் அசாத்தியமான உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் போரிட வேண்டியிருக்கும். எதிர்த் தாக்குதல் குறித்த அறிக்கை ஒவ்வொரு செம்படை வீரனுடைய உள்ளத்திலும் ஊடுருவியது.

செம்படையின் எதிர்தாக்குதல் தொடங்கியது. எதிரியின் படைகளை ஊடுருவிச் சென்றது செம்படை. எதிரியை சுற்றி வளைத்தது. சிங்கத்தின் குகைக்குள் மாட்டிக் கொண்ட நரியைப் போல ஜெர்மானியப் படை அல்லல்பட்டது. ஸ்டாலின்கிராடின் மீது படையெடுத்து வந்த 35 லட்சம் பேர் கொண்ட படை தோற்று ஓடியது. ஜனவரி 31, 1943-இல் ஜெர்மானிய தளபதியான பௌலுஸ் என்பவன் 4 லட்சம் பாசிஸ்டுகளுடன் சரணடைந்தான்.

மற்ற நாடாக இருந்தால் சரணடைந்த பாசிஸ்டுகளை ஒரே நொடியில் கொன்றிருக்கும். அவர்கள் மக்களுக்கு செய்த கொடுமைகள் அப்படிப்பட்டவை. ஆனால், சோவியத் ரஷ்யா அப்படி செய்யவில்லை. அவர்களை மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பியது. அங்கு அவர்களுக்கு மனிதர்களாக வாழ்வது எப்படி என்று கற்றுத் தரப்பட்டது. காரணம், இது கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உரிய உயர்ந்த பண்பு.

ஸ்டாலின்கிராடு சண்டை வரை, பாசிஸ்டுகள் மற்றவர்களை அடிக்கத்தான் பழகியிருந்தனர். ஸ்டாலின்கிராடில் முதன்முறையாக அவர்கள் அடிவாங்கினர். இட்லரின் அழிவு காலம் ஸ்டாலின்கிராடு சண்டையில் இருந்து தொடங்கியது. இந்த வெற்றிக் கிட்டிய பிறகும் செம்படைகளுக்கு ஓய்வெடுக்க நேரமில்லை. இது ஆரம்பக்கட்ட வெற்றிதான். இன்னும் ஒரு கோடி ஜெர்மானியப் படைகளை சோவியத் ரஷ்யாவை விட்டு விரட்ட வேண்டியப் பணியும் இருந்தது.

ஸ்டாலின்கிராடு சண்டையில் ஏராளமான முன்னணி தளபதிகளை இட்லர் இழந்தான். அவர்களில் பலர் செம்படையல் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களது இழப்பு இட்லருக்குப் பேரிடியாக இருந்தது. அதில் ஓரிருவரையாவது மீட்டுவிட முயன்றான். சண்டையிட்டு அவர்களி மீட்க முடியாது. ஆகவே குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தான் இட்லர்.

ஸ்டாலினுடைய மூத்த மகன் யாக்கவ். சாதாரண சிப்பாயாக செம்படையில் பணியாற்றி வருபவன். ஸ்டாலினும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி யாக்கவுக்கு எந்த சலுகையும் வழங்கியதில்லை. சாதாரண சோவியத் குடிமகனாகவே யாக்கவ் வாழ்ந்தான்.

எல்லைப்புறத்தைக் காவல் காத்த யாக்கவ் போரின் முதல் நாளில் இருந்தே சண்டையில் ஈடுபட்டான். அவனுடைய படைப்பிரிவு சுற்றி வளைக்கப்பட்டது. இறந்தவர்கள் போக மற்றவர்கள் சிறைபிடிக்கபட்டனர். யாக்கவும் அவர்களில் ஒருவன்.

யாக்கவ் ஸ்டாலினுடைய மகன் என்பதைத் தெரிந்து கொண்ட இட்லரின் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. சோவியத் ரஷ்யா பிடித்து வைத்திருக்கும் ஒரு முக்கியமான ஜெர்மானிய தளபதியை விடுதலை செய்தால், தான் யாக்கவை விடுவிப்பதாக பேரம் பேசினான். இதை ஏற்காவிட்டால் யாக்கவைக் கொன்று விடுவதாக மிரட்டினான்.

தன் மகன் மீது பாசம் கொண்ட ஸ்டாலின் அவனுடைய நிலையை எண்ணி வருந்தினார். ஆனால் தன் மகனுடைய மகனுடைய உயிரை காப்பாற்ற வேண்டி இட்லரின் தளபதியை விடுவிக்க முடியாது என உறுதியாக அறிவித்தார். அந்த ஜெர்மானிய தளபதி விடுவிக்கப்பட்டால், அவன் வகுக்கும் திட்டங்களின் மூலம் பல லட்சம் செம்படை வீரர்கள் கொல்லப்படுவர். ஆகவே அவனை விடுதலைச் செய்வதற்கு பதிலாகத் தன் மகன் எதிரிகளால் கொல்லப்பட்டு தியாகியாவதே மேல் என்ற முடிவு செய்தார்.

எந்த நேரத்திலும் மக்களை நேசித்தவர் தோழர் ஸ்டாலின். அவர்களுக்கா தன் உழைப்பையும் வாழ்வையும் மட்டுமல்ல தன் அருமை மகனையே தியாகம் செய்தவர் தோழர் ஸ்டாலின். அதனால்தான் அவர் சோவியத் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார்.

ஸ்டாலின்கிராடில் இருந்து செம்படையின் வெற்றிப்பயணம் தொடங்கியது. எதிரியின் படை, படிப்படியாக பின்னுக்குத் தள்ளப்பட்டது. இட்லரின் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டது. 1944-ஆம் ஆண்டு இறுதியில் சோவியத் ரஷ்யாவிலிருந்து பாசிசப் படை விரட்டியடிக்கப்பட்டது.

சோவியத் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உலகம் இதுவரை கண்டிராத வக்கிரமாக போருக்குப் பின்னால் கிடைத்த வெற்றி இது. உலகத்தின் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்திய இட்லரின் படை ஸ்டாலினுடைய செம்படை முன்னால் மண்டியிட்டது.

இருப்பினும் செம்படைக்கு இன்னும் ஓய்வு கிட்டவில்லை. இட்லரின் காலடியில் அடிமைப்பட்டுக் கிடந்த ஐரோப்பாவையும் செம்படை நிச்சயம் மீட்கும் என்று உழைக்கும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்தையே விடுவிக்கும் வரலாற்றுக் கடமையை செம்படைக்கு சுமத்தியுள்ளனர் ஏகாதிபத்தியவாதிகள்.

1945 ஜனவரியில் இருந்து அதை நிறைவேற்றும் பணியில் செம்படை இறங்கியது. இதுவரை தன் நாட்டு மக்களுக்கானப் போராடிய செம்படை பிறநாட்டு மக்களுக்காகவும் இரத்தம் சிந்தியது. இந்தப் போரில் அந்தந்த நாடுகளின் உழைக்கும் மக்களும் செம்படையுடன் இணைந்துப் போரிட்டனர்.

பாசிஸ்டுகள் தோற்று ஓடினர். ஒவ்வொரு நாடாக விடுவிக்கப்பட்டது. பல்கேரியா, போலந்து, ஹங்கேரி, கிரேக்கம், அல்பேனியா, ருமேனியா, செர்பியா, யூகோஸ்லாவியா, செக்கஸ்லோவாகியா, ஆஸ்திரியா என்று பட்டியல் நீண்டபடி இருந்தது. பாசிஸ்டுகளின் கொடுமைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் செம்படையின் வீரத்தையும் ஸ்டாலின் தலைமையையும் நெஞ்சாரப் பாராட்டினார்கள்.

ஐரோப்பாவை விடுவித்த செம்படை ஜெர்மனியின் எல்லையை நெருங்கியது. சோவியத் ரஷ்யா வெற்றி பெறுவது உறுதியானவுடன் அதுவரை பயந்துக் கிடந்த பிரிட்டனும், அமெரிக்காவும் போரில் குதித்தன. அவர்களின் படைகள் பிரான்சில் இறங்கின.

இட்லருக்குத் தன்னுடைய தோல்வி துல்லியமாகத் தெரிந்தது. இருந்தாலும் சோசலிச சோவியத் ரஷ்யாவிடம் தோற்பதை அவனால் ஏற்க முடியவில்லை. அதனால் அமெரிக்க பிரிட்டன் படைகளிடம் தன் நாட்டை ஒப்படைக்கத் திட்டமிட்டான். ஆகவே தன்னுடைய படைகள் அனைத்தையும் செம்படைக்கு எதிராக குவித்தான். பிரிட்டன் - அமெரிக்க படைகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் (பயத்துடன்) ஜெர்மனியை நோக்கி முன்னேறின.

இதைப் புரிந்து கொண்ட தோழர் ஸ்டாலின் "இந்த மே தினத்திற்குள் பெர்லினை செம்படை பிடிக்கும், ஜெர்மன் பாராளுமன்றத்தின் மேல் செங்கொடிப் பறக்கும்" என பகிரங்கமாக சவால் விடுத்தார்.

இந்த சூளுரையின் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொண்ட செம்படை வீரர்கள் உணவு, உறக்கம் மறந்துப் போரிட்டனர். வர்க்க உணர்வு கொண்ட ஜெர்மனியத் தொழிலாளர்கள் ஒவ்வொரு இடத்திலும் பாசிஸ்டுகளை எதிர்த்துப் போரிட்டனர். பாசிஸ்டுகளின் உறுதிக் குலைந்தது. செம்படை முன்னேறியது.

இட்லரின் கொடுங்கோன்மயில் இருந்து தங்களை மீட்ட செம்படையை வாழ்த்தி வரவேற்றனர் ஜெர்மானிய மக்கள். சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டன. சிறை முகாம்களில் வாடிய மக்களுக்கு விடுதலை கிடைத்தது. 14 ஆண்டுகளில் சிறை முகாம்களில் கசக்கிப் பிழியப்பட்ட ஆல்பிரடு சுதந்திர காற்றை சுவாசித்தார். தங்களை விடுவித்த செம்படைக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். உழைக்கும் மக்கள் ஸ்டாலினுடைய படம் மற்றும் செங்கொடியை ஏந்தி முழக்கமிட்டபடிச் சென்றனர். ஆல்பிரடும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டான். பலம் அனைத்தையும் திரட்டி உரக்க முழக்கமிட்டான்.

"தோழர் ஸ்டாலின் நீடூழி வாழ்க!
செம்படை நீடூழி வாழ்க!"

30 ஏப்ரல் 1945 செம்படை பெர்லினின் வாசலில் சண்டையிட்டது. கடுமையான சண்டை. விடிந்தால் மே தினம். மே தினம் முடியும் வரை மிச்சமிருக்கும் பலமனைத்தையும் திரட்டிப் போரிட இட்லர் உத்திரவிடுகின்றான்.

10. ஸ்டாலினுடைய சூளுரையும் ஜெர்மன் பாராளுமன்றத்தில் செங்கொடியும்

அன்றைய இரவு பெர்லினின் மூலை முடுக்குகளில் எல்லாம் சண்டை நடந்தது. நள்ளிரவில் பெர்லினுடைய மையப் பகுதியை அடைந்தது செம்படையின் முன்னணிப் படை. தோல்வி தன் வீட்டு வாசலைத் தட்டியவுடன் குப்புற விழுந்தான் இட்லர். ஒரு கோழையைப் போல தற்கொலை செய்து கொண்டான். கோடிக்கணக்கான மக்களைக் கொன்ற பாசிஸ்டு ஒழிந்தான்.

அவன் தற்கொலை கொள்ளும் முன் தன் பாசிஸ்டு படைக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தான். "எக்காரணம் கொண்டும் செம்படையிடம் மட்டும் மண்டியிடாதீர்கள்". இதுவே இந்த உத்தரவு. இட்லர் இறந்த பின்னும் பாசிஸ்டுகளின் படை சண்டையிட்டது.

முன்னணிப் படையில் குறைவான எண்ணிக்கையிலே வீரர்கள் இருந்ததால் செம்படையின் பணி கடினமாகியது. இருந்தாலும் எதிரியின் எதிர்ப்பை முறியடித்து விடிவதற்குள் பாராளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டது. கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பொழுது ஏறிக் கொண்டே இருந்தது. பாராளுமன்றக் கட்டிடத்தின் மீது செங்கொடியைப் பறக்க விடவேண்டும் என்ற தோழர் ஸ்டாலினுடைய கட்டளையை நிறைவேற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதை நிறைவேற்ற யெகராவ், கண்டாரியா என்ற இரு செம்படை வீரர்களும் முன் வந்தனர். கையில் செங்கொடியுடன் குண்டு மழைக்கு நடுவே பாய்ந்தோடி பாராளுமன்றத்திற்குள் புகுந்தனர். இதற்குள் கட்டிடத்தில் இருந்த பாசிஸ்டுகள் அதற்கு தீ வைத்தனர். கட்டிடம் முழுவதும் பரவிய புகையானது கண்களை மறைத்தது. தகிக்கும் வெப்பமும் கடுமையாக இருந்தது. இதற்கிடையில் உச்சிக் கோபுரத்திற்கு செல்லும் படிக்கட்டைக் கண்டுப்பிடித்து மேலே ஏறினர் யெகராவும், கண்டாரியாவும்.

சிறிது நேரத்தில் அவர்கள் அந்த மிக உயர்ந்தக் கட்டிடத்தின் உச்சியில் ஏறி நின்றார்கள். வழுக்கும் உச்சி கோபுரத்தின் மீது உறுதியாக ஏறத் தொடங்கினார்கள். பக்கத்துக் கட்டிடத்தின் மதில் சுவருக்கு பின்னால் இருந்து இயந்திரத் துப்பாக்கியால் அவர்களை சுடத் துவங்கினான் ஒரு ஜெர்மானியன்.

இதைப் பார்த்து கொண்டிருந்த பாவெல், அவர்களுக்கும், செங்கொடிக்கும் ஸ்டாலினுடய சூளுரைக்கும் நேரவிருந்த ஆபத்தைப் புரிந்து கொண்டான். தன் துப்பாக்கியால் சுட்டபடி எதிரியின் எந்திரத் துப்பாக்கியை நோக்கி ஒடத் தொடங்கினான். எந்திரத் துப்பாக்கி தன் திசையை மாற்றியது. பாவெலைக் குறி வைத்து சுட்டது. குண்டுகள் பாவெலுக்குள் ஊடுவருவி வெடித்துச் சிதறின.

பாவெலோ தான் வைத்திருந்த எறிகுண்டை வீசியெறிந்தான். எந்திரத் துப்பாக்கி நொறுங்கியது. கீழே விழுந்த பாவெல் அண்ணாந்து பார்த்தான். ஜெர்மானிய பாராளுமன்றத்தின் மேல் செங்கொடி பறந்துக் கொண்டிருந்தது. பாவெலின் தோழர்கள் ஸ்டாலினுடைய சூளுரையை நிறைவேற்றி விட்டனர். இரத்தம் வடிந்துக் கொண்டிருந்த பாவெலின் முகம் புன்னகைத்தது. செங்கொடியைப் பார்த்துக் கொண்டிருந்த கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றன.

பாசிச எதிர்ப்புப் போரில், எதிரியை வீழ்த்த உயிர்நீத்த கோடிக்கணக்கான தியாகிகளில் ஒருவனாக பாவெல் மாறினான். அவர்களின் தியாகம் வீண்போகவில்லை. பாராளுமன்றக் கட்டிடத்தில் செங்கொடி ஏறியவுடன் பாசிசக் படைகள் சரணடைந்தன. 14 ஆண்டுகளாக உலகை ஆட்டிப் படைத்த பாசிசக் கூட்டம் உழைக்கும் மக்கள் படையிடம் மண்டியிட்டது.

உலகின் உழைக்கும் மக்கள் நிம்மதி அடைந்தனர். சோவியத் ரஷ்யாவிற்கும், ஸ்டாலினுக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பினர். உலகின் ஒவ்வொரு பாகத்திலும் உழைக்கும் மக்கள் வெற்றிப் பேரணி நடத்தினர். எங்கு பார்த்தாலும் செங்கொடிகள், ஸ்டாலின் படங்கள். பாசிசத்தை கம்யூனிசம் வென்றது. எதிர்காலம் கம்யூனிசத்திற்கே என்பது நிரூபணமானது.

11. இரண்டாம் உலகப் போரை முறியடித்தப் பெருமை தோழர் ஸ்டாலின் தலைமயிலான செம்படைக்கே!

உலகையே அச்சுறுத்தியப் பாசிசத்தை ஒழித்து இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தனர் சோவியத் மக்கள். இதற்கு அவர்கள் புரிந்த தியாகம் ஈடு இணையற்றது. பாசிஸ்டுகளை வீழ்த்த் 3 கோடி ரஷ்யர்கள் உயிர் துறந்தனர். 1710 நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. 70,000 கிராமங்கள் முற்றாக எரிக்கப்பட்டன. 32,000 பெரிய ஆலைகளும் 98,000 கூட்டுப் பண்ணைகளும் அழிக்கப்பட்டன.

இத்தனை இழப்புகளுக்கு மத்தியிலும் அவர்கள் மனம் தளராமல் போராடினார்கள். இட்லரின் பெயரைக் கேட்டதும் அஞ்சி நடுங்கின மற்ற நாடுகள். அமெரிக்காவும், பிரிட்டனும் முக்காடு போட்டு ஒளிந்து கொண்டன. இப்படி எல்லோரையும் பயமுறுத்திய இட்லரை சோவியத் ரஷ்யா வீழ்த்தியதன் ரகசியம் என்ன? சோதனைகளைத் தாங்கி கொண்டு எதிரிக்கு பதிலடிக் கொடுக்கும் மன உறுதியை சோவியத் மக்கள் பெற்றதன் மர்மம் என்ன?

இதற்கெல்லாம் ஒரே பதில் பாட்டாளி வர்க்க தலைவர் ஸ்டாலினும், சோவியத் செம்படை வீரர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தான். சோவியத் மக்களின் பலத்திற்கு ஊற்றுக் கண்ணாக விளங்கிய ஸ்டாலின், சொகுசாக பதவிக்கு வந்தவர் அல்ல. புரட்சி எனும் போராட்டக் களத்தில் வார்த்தெடுக்கப்பட்டவர். லெனினது கம்யூனிஸ்ட் கட்சி என்னும் பல்கலைக்கழகத்தில் தன் திறன்களை வளர்த்துக் கொண்டவர். லெனினுக்கு பிறகு சோசலிசத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் கட்டிப் பாதுகாத்தவர்.

இக்கட்டான சூழ்நிலைகளிலும் கலக்கமடையாமல் பொறுமையோடும் உறுதியோடும் பிரச்சனைகளைக் கையாள்வதில் சிறப்பு இயல்பை கொண்டவர்.

ஸ்டாலின் தோல்வியைக் கண்டு துவளமாட்டார். அதிலிருந்து பாடம் கற்று, மீண்டும் போராடி வெற்றி பெறுவார். ரஷ்யப் புரட்சியில் தோல்வி ஏற்பட்ட போர்முனைகளுக்கெல்லாம் ஸ்டாலினைத் தான் அனுப்பினார் லெனின். ஸ்டாலின் தோல்விகளை வெற்றியாக மாற்றியதால், புரட்சி வெற்றி பெற்றது. இட்லருக்கு எதிரான போரில் செம்படையானது பாதி வீரர்களை இழந்தபோதும் பின்வாங்கியபோதும் ஸ்டாலின் துவண்டு விடாமல் முனைப்புடன் போராடியவர்.

சாதாரண காலத்திலேயே அவர் கடுமையாக உழைப்பார். போர் மூண்டாலும் ஒவ்வொரு நாளும் 20 மணி நேரம் வேலை செய்தார். கம்யூனிஸ்ட் கட்சி, அரசு நிர்வாகம் ஆகிய மூன்றையும் திறம்பட வழிநடத்தும் பணியையும் செய்தார். அதற்காக திட்டமிடுதல், விவாதித்தல், கூட்டங்களில் பேசுதல், திட்டங்கள் அமுலாவதை கண்காணித்தல், சோர்வுற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுதல் என ஓய்வின்றி இரவு பகலாக உழைத்தார். தொடர்ச்சியாக பல நாட்கள் உண்ணாமல் உறங்காமல் வேலை செய்தார்.

அவர் அசாத்தியமான நெஞ்சுரம் கொண்டவர். மாஸ்கோ முற்றுகையிடப்பட்ட நேரத்தில் செம்படை வீரர்களைத் தவிர மற்றவர்கள் நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேறினர். அவருடைய அலுவலகத்தை சுற்றி குண்டுகள் வெடித்தன. அலுவலகக் கட்டிடம் அதிர்ந்துக் குலுங்கியது. ஸ்டாலின் நகரைவிட்டு வெளியேற மறுத்து குண்டு வீச்சுக்கு நடுவே தன் வேலைகளைச் செய்தார். அவரது வீரத்தைப் பின்பற்றி செம்படைப் போரிட்டது.

அறிவுக் கூர்மையில் லெனினுக்கு இணையாக விளங்கியவர். பிரச்சனைகளின் அடியாழத்தைப் புரிந்துக் கொண்டு சரியான தீர்வு சொல்லும் திறமை அவருக்கு இருந்தது. தோழர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களுக்கேற்றப் பொறுப்புகளைக் கொடுக்கும் தன்மை அவரிடம் இருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் பாட்டாளி வர்க்கத் தன்மையை கட்டிக் காக்க போராடினார். லெனின் உருவாக்கிய கட்சிக் கட்டுப்பாட்டை பாதுகாத்தார். கட்சியை பலவீனப்படுத்தும் எதிரிகள், துரோகிகளின் முயற்சிகளை முறியடித்தார்.

இந்த குணங்கள் ஸ்டாலினிடம் இருந்ததால் தான் அவரால் எதிரிக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அறிவு புகட்டி, நம்பிக்கையூட்டி, கிளர்ந்தெழ வைத்து, கடும் சமர் செய்ய வைத்து இறுதியாக இட்லரை வீழ்த்த முடிந்தது.

போர் முடிவுக்கு வந்தாலும் ஸ்டாலினுக்கு ஓய்வில்லை. தரைமட்டமாக்கப்பட்டிருந்த சோவியத் ரஷ்யாவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. சோசலிச பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்ட வேண்டியிருந்தது. மாபெரும் சரிவிலிருந்து மீண்டெழ வேண்டியிருந்தது. அதற்காக அவர் நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். சோவியத் மக்கள் போர் முனையில் காட்டிய வீரத்தை உற்பத்தியிலும் காட்டினர். சோதனைகளை உழைப்பினால் நான்கே ஆண்டுகளில் பழைய வளமான நிலைக்கு சோவியத் ரஷ்யா திரும்பியது. அதுமட்டுமல்ல பொருளாதார வளர்ச்சியில் உலகத்தில் முதலிடத்தையும் பிடித்தது சோவியத் ரஷ்யா.

இரண்டாம் உலகப் போர் வரை சோவியத் ரஷ்யா ஒரே ஒரு சோசலிச நாடாக இருந்தது. போர் முடிந்ததும் நிலைமை மாறியது. ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யாவுடைய வழிகாட்டுதலின் கீழ் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா, வியட்நாம், வடகொரியா, கம்போடியா என ஏராளமான நாடுகளில் புரட்சி வெடித்தது. உழைக்கும் வர்க்கம் ஆட்சியை கைபற்றியது. சோசலிசம் மலர்ந்தது. எப்போதும் போல அமெரிக்க ஏகாதிபத்தியம் அவற்றை அழிக்க முயற்சி செய்தது. ஸ்டாலின் விழிப்புடன் இருந்து அந்த முயற்சிகளை முறியடித்து இளம் சோசலிச நாடுகளை பாதுகாத்தார்.

இந்த தொடர்ச்சியான கடும் உழைப்பு, ஸ்டாலினுடைய உடலை உருக்குலைத்தது. 1953 பிப்ரவரியில் அவர் நோய்வாய்பட்டார். வாழ்க்கையில் முதன்முறையாக அவர் ஓய்வை நாடினார். 1953 மார்ச் 5-ஆம் நாள் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு ஸ்டாலின் மரணம் அடைந்தார். ஆனால் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் நெஞ்சங்களில் இன்னும் வாழ்கிறார்; என்றும் வாழ்வார்.

இடலரின் ஒடுக்குமுறையிலிருந்து உலக உழைக்கும் மக்களை விடுவித்தது தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் செம்படை. அப்படையின் அனுபவத்தையும், பாட்டாளி வர்க்க ஆசானாகிய ஸ்டாலின் காட்டிய புரட்சிகர நடைமுறையையும் வரித்துக் கொள்வோம். அவரைப் போலவே நெஞ்சுரத்துடன் போராடுவோம்!

மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! நமது நாட்டிலும் நக்சல்பாரி தலைமையில் புரட்சியை நடத்தி முடிப்போம்! புதிய ஜனநாயக அரசைக் கட்டியமைப்போம்!